Skip to main content

"பிரபாகரனின் மறு அவதாரம் சீமான்!" - பாரதிராஜா 

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

"வேலு பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் இல்லை. அவன் மறுஅவதாரமாக வந்திருக்கிறார் சீமான். பிரபாகரனுடைய சீருடையை சீமானுக்குப் போட்டுப் பாருங்க, அப்படியே இருப்பான். அவர் செந்தமிழ் என்று சொல்லுவார்... ஆனால், இவர் கருப்புத் தமிழன். நீங்கள் எல்லாம் 30க்கு கீழே... எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. சரியான பாதையை தேர்ந்தெடுத்துப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்".

 

barathiraja



சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று (மே 18) இன எழுச்சி அரசியல் மாநாடு நடைபெற்றது. சீமான் தலைமையில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் நினைவாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இயக்குநனர் பாரதிராஜா பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ளவை.

மேலும் அவர், 

"பல அமைப்புகள் மொழி, இனம் பற்றி பேசுகிறார்கள். பேசலாம், ஆனால் உண்மை பேச வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். அது, இந்த சீமானிடம் உள்ளது. நான் பொய் சொல்லவில்லை. அவனது சமீபமாக அரசியல், இனம், மொழிக்காக கொடுக்கின்ற உத்வேகம், 'பெரிய இடைவெளிக்குப் பின்னால் ஒரு அக்னி குஞ்சு ஒன்று பிறந்திருக்கிறது' என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. என்னை சிலர் கேட்டார்கள், 'நீ இதை கையில் எடுத்திருக்கலாம்' என்று. அவனுக்கு இருக்கக் கூடிய வீரம், ஆற்றல்... அது வேற. அவனும் கலைஞன் தான் நானும் கலைஞன்தான். ஆனால், நான் கலையில் முழுமையாக ஈடுபட்டேன். எங்கேயாவது பிரச்சனை என்றால் குரல் கொடுப்பேன். ஆனால் அவன் அப்படி இல்லை. அழுத்தமாக ஊன்றி நிக்கிறான். இந்தத்  தலைமுறையில் இந்த அக்னி குஞ்சை விட்டால் வேறு வழியில்லை.

 

 


சீமான் சமீபகாலமாக மிக தெளிவாக இருக்கிறார். உடம்பில் வெள்ளை சிவப்பு என்று இரண்டு அணுக்கள் இருக்கு. இதில் இரண்டில் ஒன்று குறைந்தால் கூட ஆபத்து. உன் இளைஞர்களுக்கு எல்லாம் இனம், மொழி என்ற வெள்ளை அணு, சிவப்பு அணு சரியான கலவையில் இருக்கு. இங்கு பேசியவர்கள் பொய்மையாகப் பேசவில்லை, உணர்ச்சிவசப்பட்டுப் பேசவில்லை உண்மையாகப்  பேசினர். ஆனால் ஒன்று, தனிமனித விமர்சனங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தை தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இது. 

  seeman



இப்ப வந்து 8 வழி சாலை அமைக்க வேண்டும் என்கிறார்கள். அதை போய் நான் பார்த்தேன். அங்க இருக்கிற மலையை எல்லாம் குடைஞ்சு எடுத்துவிட்டார்கள். அந்த மலையில் இருக்கக் கூடிய கனிம வளமெல்லாம் யாருக்கு? எங்கேயோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்தப் போராட்டத்தையும் எடுத்து நடத்துவது சீமானின் கடமை. 'புலியை முறத்தால் விரட்டிய வீரத்  தமிழச்சி' என்று புறநானூற்றில் பார்த்தோம். அதன் பிறகு, தமிழச்சி தன் பிள்ளையை போருக்கு அனுப்புவாள், போரிலே அவன் மாண்டுவிடுவான், செய்தி வரும், அவள் கேட்பாள் 'என் பிள்ளை வேல் முதுகில் பாய்ந்ததா அல்லது நெஞ்சில் பாய்ந்ததா? புறமுதுகு இட்டு ஓடியிருந்தால் வேல் அவன் முதுகில் பாய்ந்திருக்கும். அப்படியென்றால் அவனுக்குப் பால் கொடுத்த மாரை வெட்டி எறிவேன்' என்று சொன்ன தமிழச்சி. அத்தகைய தமிழச்சியை நான் பார்த்தது ஈழத்தில் தான். 

 

 


அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய்விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும். நாகரீகமாக ஒவ்வொருவருக்கும் நடுகல் நடப்பட்டு இருக்கிறது. மூத்தகுடி, 3000 ஆண்டுகளுக்கு முன்னாடி, என்று பேசிப் பேசி தோற்றுவிட்டோம். அன்றைக்கு இருந்த மத்திய அரசும் மாநில அரசும் மிகப்பெரிய குற்றவாளிகள். உலக வரலாற்றில் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது. எங்கள் பிள்ளைகள் மறைந்து விடவில்லை. இதோ இங்கு கூடியிருக்கிறார்கள். சரியான பாதையில் நீங்கள் நடைபோட்டால் நாடு உங்கள் வசம். இந்த நாடு உங்கள் வசம் என்றால் ஈழம் உங்கள் வசம்" என்று பேசினார்.   





 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.