Skip to main content

இளம் பெண்ணின் வலையில் சிக்கிய அரசியல் தலைவர்கள்; அம்பலமாகும் உண்மைகள்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Young woman extorts money from political leaders Odisha
 அர்ச்சனா நாக்

 

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிய கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். இவருக்கு 26 வயதாகிறது. குடும்ப வறுமை காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டில், தனது தாயுடன் புவனேஷ்வருக்கு குடியேறிய அர்ச்சனா, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்ப செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, ஜெகபந்த் என்பவருடன் அர்ச்சனாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்கும் தொழிலை செய்து வருகிறார். இதனால், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

 

Young woman extorts money from political leaders Odisha

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலமானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். மேலும், அவர்களுடன் சில இளம் பெண்களையும் பழக வைத்துள்ளார். அப்போது, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய புள்ளிகளின் புகைப்படங்களை ரகசியமாகப் படம் பிடித்த அர்ச்சனா, அதை வைத்து, மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். இப்படி 30க்கும் மேற்பட்டவர்களைப் படம் பிடித்து மிரட்டிய அர்ச்சனா மற்றும் ஜெகபந்த் தம்பதியினர் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தாலும் அர்ச்சனாவின் பண பலத்தால், அவை வந்த வேகத்தில் மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அர்ச்சனா மீது மோசடி புகார் அளித்திருந்தார். அவரை தொடர்ந்து, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக, இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பிறகுதான் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது

 

அந்தரங்க வீடியோக்களை வைத்து பலரிடமும் பணம் பறித்துவந்த அர்ச்சனாவுக்கு அவரது கணவர் ஜெகபந்த் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து,  அர்ச்சனாவையும் ஜெகபந்த்தையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மோசடி தம்பதியினரின் வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது ஒடிசா மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்பட 25 க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், இந்த மோசடி வலையில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான் என்பவர் தனது கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.