
குறுக்கே பூனை வந்ததால், அந்த பூனையை பெண் உள்ளிட்ட ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மொரதாபாத் பகுதியில் பெண் ஒருவரும், அவரது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வழியே ஒரு காட்டு பூனை குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், காட்டு பூனையை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டபோது அதை வீடியோவாகவும் தங்கள் செல்போனில் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து, போஜ்பூர் காவல்நிலையத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். பெண் பயணித்த பைக் எண் குறித்து விசாரித்ததில், போஜ்பூரைச் சேர்ந்த பிரியா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிரியா மற்றும் அவரது நண்பர் மீது 9, 39, 51 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.