Skip to main content

மம்தாவுக்கு ஒரு நாள் 'தடை'! - அதிர்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸார்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

west bengal cm mamata banerjee election campaign election commission order

 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. 

 

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பா.ஜ.க.மீதும், பா.ஜ.க. தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். 

 

இதனால், இரு கட்சிகளின் நிர்வாகிகளிடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மோதலைக் கட்டுப்படுத்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மீது பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

இந்தப் புகார் மனுவை பரிசீலித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நாள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், 'மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (12/04/2021) இரவு 08.00 மணி முதல் நாளை (13/04/2021) இரவு 08.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

11 புதுமுகங்கள் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 DMK released the list of 11 newcomers- candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வாசித்தார். அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை-கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ.மணி, ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ.ராசா, வேலூர் - கதிர் ஆனந்த்,கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண்நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 50 சதவீதத்திற்கும் மேல் 11 புதிய முகங்கள் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தர்மபுரி - ஆ.மணி, ஆரணி -தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதுமுக வேட்பாளர்கள் ஆவர்.

தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜி.செல்வம், ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை, கதிர் ஆனந்த் ஆகியோர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . தூத்துக்குடியில் கனிமொழி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசியில் ராணி ஸ்ரீ குமார் என மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட தொண்டர்கள், ஒன்றிய செயலாளர்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைவர்கள், இரண்டு மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், ஆறு வழக்கறிஞர்கள்  திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.