Skip to main content

தொடர் சர்ச்சை; யுபிஎஸ்சி ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
UPSC Chairman Manoj Soni resigns suddenly

இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த நிலையில் யுபிஎஸ்சி ஆணைய தலைவராக  இருந்த மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட மனோஜ் சோனி கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2029 ஆம் ஆண்டுவரையுள்ள் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.  

கடந்த 2005 ஆம் ஆண்டு வதோராவில் உள்ள பிரபல எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தனது 40வது வயதில்  மனோஜ் சோனி நியமிக்கப்பட்ட நிலையில், நாட்டிலேயே முதல் இளம் துணைவேந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பிறகு 2015 வரை அடுத்தடுத்து பல்கலைகழங்களில் துணைவேந்தராக மனோஜ் சோனி பணியாற்றிய நிலையில், 2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

ஒரு அரசியல் அமைப்பு ஆணையத்திற்கு  நடுநிலையான நபரைத் தேர்ந்தெடுக்காமல், கட்சியைச் சார்ந்தவர் போன்று இருக்கும் மனோஜ் சோனியைத் தலைவராக எப்படி நியமிக்க முடியும் என  ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அண்மைக் காலமாக யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜை  கேட்கர் பல்வேறு முறைகேடுகள் செய்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது அம்மலமாகியுள்ளது.

இந்த நிலையில்தான் யுபிஎஸ்சி ஆணையத் தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவரின் ராஜினாமா கடிதத்திற்குக் குடியரசுத் தலைவர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்