
இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று (19/04/2021) மாலை 06.40 மணியளவில் இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்களோடு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.
கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுடனான ஆலோசனையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசித்து வருவதாகத் தகவல் கூறுகின்றன.