Skip to main content

மணிப்பூரில் மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Two more women issue and incident in Manipur

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான ஹேராதாஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்து இருந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுமட்டுமின்றி மணிப்பூர் கலவரத்தில் ஈடுபட்ட 657 பேரை இதுவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக 129 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது இளைஞர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட இரு பெண்களும் இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்