Skip to main content

பங்குச்சந்தை: ஸ்டார் ஹெல்த் ஐ.பி.ஓ. வெளியீடு! 

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Stock Market: Star Health IPO Release!

 

மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ‘ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ்’ நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. 

 

பங்குச்சந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு முதலீடுகளைத் திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு; அதாவது, ஐ.பி.ஓ. என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐ.பி.ஓ.க்களுக்கு வரவேற்பு இருக்கும். 

 

இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐ.பி.ஓ.வை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் புரமோட்டராக இருப்பதால், இப்பங்கின் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிந்துள்ளது. 

 

இந்நிறுவனம், 7249.18 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட்டுள்ளது. வரும் வியாழனன்று (டிச. 2) இந்த வெளியீடு முடிவடைகிறது. கிரிசில் தரவுகளின்படி, இந்நிறுவனத்திற்கு சில்லறை வர்த்தகத்தில் 31.3 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. 

 

இந்த ஐ.பி.ஓ.வில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை 870 முதல் 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐ.பி.ஓ.வை பொருத்தவரை, நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களின் விற்பனை, புதிய பங்கு வெளியீடு என்று கலவையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

 

ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், சேப்கிராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்.எல்.பி., கோனார்க் டிரஸ்ட் அன்டு எம்.எம்.பி.எல். டிரஸ்ட் உள்ளிட்ட புரமோட்டர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யலாம் எனத் தெரிகிறது. மேலும், அபிஸ் குரோத் 6 லிமிடெட், மயோ 4 ஸ்டார், யூனிவர்சிட்டி ஆப் நோட்ரி டேம் டு லாக், மயோ ஸ்டார், ஆர்.ஓ.சி. கேபிடல், வெங்கடசாமி ஜெகநாதன், சாய் சதீஸ், பெர்ஜிஸ் மினு தேசாய் ஆகிய புரோமோட்டர்களும் தங்களுடைய பங்குகளை விற்கலாம் என்கிறார்கள். 

 

எனினும் முதன்மை புரமோட்டரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது 14.98 சதவீத பங்குகளை விற்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. 

 

இந்த ஐ.பி.ஓ.வில், 2000 கோடி ரூபாய்க்கான ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களின் 5249 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனைக்கான சலுகை (ஓஎப்எஸ்) ஆகியவையும் அடங்கும். இது மட்டுமின்றி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. முதலீட்டாளர்கள், அதிகபட்ச வெளியீட்டு விலையின் அடிப்படையில், 16 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் கோர முடியும். அதாவது,  ஒரு லாட் வாங்க 14400 ரூபாய் தேவை. 

 

இந்த வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (கியூஐபி) 75 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் (என்ஐஐ) மீதமுள்ள 10 சதவீத பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியில் இருந்து இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்