
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கரோனா பரவும் ஆபத்து அதிகம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கரோனா வைரஸின் தாக்கம் அண்மைக்காலமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்தவகையில், இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669- லிருந்து 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,193- லிருந்து 34,968 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், "புகைபிடிப்பவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புகைபிடிக்கும்போது, கையில் இருந்து வாய்க்கு வைரஸ் பரவுவதற்கான வாய்பு அதிகரிக்கிறது. மேலும், பைப், ஹுக்காவை பயன்படுத்தும்போது வைரஸ் தொற்று ஏற்படும். அதேபோல, தொடர் புகை பழக்கத்தால் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் எளிதில் தொற்றுவதோடு, அதன் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.