![Rajput movement leader lost his life so Rail and road strike](http://image.nakkheeran.in/cdn/farfuture/p9ONte2tL5yVLPlrVypu3Hjo29pW7-ESFvJYi7GP2v4/1701927157/sites/default/files/inline-images/rajput-protest-ni.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சிங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர், சுக்தேவ் சிங்கின் கொலையை கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், மோதபூர், பண்டி, அஜ்மீர், சவாய், கோடா, சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.