ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயியான பெலுகான் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனக்கு சொந்தமான பசு மாடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, பசு காவலர்கள் என கூறப்பட்ட ஒருசிலரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ராஜஸ்தான் போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெலுகான் மற்றும் அவரது 2 மகன்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மே 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5, 8, 9 -ன் கீழ் அவர் மீதும், அவரது இரண்டு மகன்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2 வருடங்களுக்கு முன் இறந்த ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ராஜஸ்தான் காவலர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என கூறி ராஜஸ்தான் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிய நிலையிலும், நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளதை சமூகவலைத்தளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.