Skip to main content

‘10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

Met Dept information Chance of heavy rain in 10 districts

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் நேற்று (27.02.2025) வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (28.02.2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (01.03.2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதையொட்டி 12 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு சார்பில் நேற்று கடிதம் எழுதப்பட்டது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாப்பது குறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும்  புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்