Skip to main content

"அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள்" - விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

rahul gandhi

 

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.

 

மேலும், லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி கோரிய ராகுல் காந்தி தலைமையிலான ஐவர் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி உட்பட மூன்று பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல மீண்டும் காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு, ராகுல் காந்தியுடன் மேலும் மூவர்  லக்கிம்பூர் செல்ல அனுமதியளித்தது. மேலும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்திக்கும் லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதியளித்தது.  இதனையடுத்து ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் தற்போது டெல்லியிலிருந்து விமானத்தில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வரும், பஞ்சாப் முதல்வரும் லக்கிம்பூர் வன்முறையில் இறந்தவர்களுக்கான நிவாரண தொகையை அறிவித்தனர்.

 

இதன்பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற ராகுல் காந்தியையும், அவருடன் இருந்த இரு மாநில முதல்வர்களையும் தங்கள் காரில்தான் செல்ல வேண்டும் என உத்தரப்பிரதேச போலீசார் கூறியுள்ளனர். ஆனால், இதனை ராகுல் காந்தி ஏற்க மறுத்ததால் அவரை காவல்துறையினர் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ராகுல் காந்தியும், இரண்டு முதல்வர்களும் விமான நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கு முன்னதாக "எந்த விதிமுறையின் அடிப்படையில் நான் எப்படி செல்ல வேண்டும் என நீங்கள் முடிவெடுக்கிறீர்கள்? அந்த விதியைக் கூறுங்கள்" என காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் எங்கள் காரில் (லக்கிம்பூர் கேரிக்கு) செல்ல விரும்புகிறோம், ஆனால் அவர்கள் (போலீஸ்) எங்களை தங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது தனிப்பட்ட வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். எனவே நான் இங்கு அமர்ந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்