
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் ஜிப்மர் நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதையடுத்து இந்த சுற்றறிக்கை இந்திய அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்றும் கூறி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; பதிவேடுகளை பராமரிப்பதில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் பா.ம.க சார்பில் ஜிப்மர் மருத்துவ நிறுவனம் முன் இன்று (11.05.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை அமைப்பாளர் கணபதி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பா.ம.கவினர் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தித் திணிப்பைக் கண்டித்தும், உடனடியாக அலுவல் நடைமுறைகளில் இந்திய திணிப்பதை நிறுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.