Skip to main content

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைவதில் சிக்கல்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

prashant kishor

 

தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலோடு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து அவர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

 

மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய அகில இந்திய அளவில் முக்கிய பொறுப்பினை கேட்பதாகவும், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் தங்கள் கட்சியில் இணைவது குறித்து விவாதித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதன்பின்னர் நடந்து முடிந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

 

இருப்பினும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இன்னும் இணையவில்லை. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர், கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் இணைப்பது தொடர்பாக கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்துவிட்டு அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவலாம் என சந்தேகத்தை எழுப்பியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் சமீபத்தில் பதிவிட்ட ட்விட் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர், "லக்கிம்பூர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பழம்பெரும் கட்சியின் தலைமையிலான (காங்கிரஸ்) எதிர்க்கட்சிகளின் விரைவான மற்றும் தன்னிச்சையான மறுமலர்ச்சியை எதிர்பார்ப்பவர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு தயாராகின்றனர். துரதிர்ஷ்டவசமாக பழம்பெரும் கட்சியின் ஆழமாக வேரூன்றிய பிரச்சனைகளுக்கும், கட்டமைப்பு பலவீனங்களுக்கு விரைவான தீர்வுகள் இல்லை" என ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.