Skip to main content

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்: பரபரப்பு திருப்பம் - களமிறங்கும் என்.ஐ.ஏ

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

amabani house

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில் பகுதியில் ஆன்டிலியா என்று அழைக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்றது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சில நம்பர் பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இந்த நம்பர் பிளேட்டில் ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் பிளேட்டோடு ஒத்துப்போவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிப்ரவரி 25ஆம் தேதி இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள் அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு காரை நிறுத்திவிட்டு, இன்னொரு காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மன்சுக் ஹிரென் என்ற அந்த உரிமையாளர், தனது கார் முன்னரே காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் கார் காணாமல் போனது குறித்து புகாரளித்திருப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த ஐந்தாம் தேதி, மன்சுக் ஹிரென் தானேவில் உள்ள கல்வா கால்வாய்ப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் அந்தக் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் மும்பை காவல்துறை ஆணையர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தார். மேலும், மன்சுக் ஹிரென் மரணம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இதனிடையே பரபரப்பு திருப்பமாக, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட மன்சுக் ஹிரென் மரணம் குறித்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்புப் படை, கொலை, கிரிமினல் சதி மற்றும் ஆதாரங்களை அழிக்க முயற்சி என நேற்று (07.03.2021) வழக்குப் பதிவுசெய்தது. இந்தநிலையில் அம்பானி வீட்டின் அருகே நின்ற காரிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசியப் புலனாய்வு முகமை இதுகுறித்து மறுவழக்குப் பதிவுசெய்து விசாரிக்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.