Skip to main content

'கரோனா விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துக!' - மத்திய உள்துறை செயலாளர் கடிதம்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

ministry of home affairs secretary wrote the letter for all states chief secretaries

 

தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சில மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு, பேருந்து சேவையை நிறுத்துவது உள்ளிட்ட கடுமையான கரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ளன.

 

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்புப் பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். பொது இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல், மெத்தனப் போக்குடன் மக்கள் நடந்து கொள்கிறார்கள். கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தேவைப்படும் கரோனா தடுப்பு நடைமுறைகளை நிர்வாக அதிகாரிகள் கடுமையாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

What are the symptoms of dengue fever?

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவியதற்கான அறிகுறிகளை எளிய முறையில் கண்டறிந்து அதை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள்.

 

இதில் டெங்கு நோய்த் தொற்றின் முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாகும். இது பொதுவாகத் திடீரென்று தோன்றும் மற்றும் பல நாள்களுக்கு நீடிக்கலாம். இதில் ஆரம்ப அறிகுறியானது, உடல் சோர்வு அதிகமாகக் காணப்படும். மேலும், படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி இருக்கும். தலைவலி கூடுதலாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள் மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாகும். 

 

அதே தீவிர அறிகுறி என்றால், பல் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இந்த காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கக் கூடிய நிலவேம்பு கசாயத்தை அருந்தலாம். 

 

மேலும், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களைத் தடுப்பதற்கு நமது வீட்டில் உள்ள தேவையற்ற நீர் தேங்கும் தொட்டி அல்லது பாத்திரங்களை அகற்றிவிட வேண்டும். ஏனென்றால், நீர் தேங்கும் இடத்தில் கொசு தனது இனப்பெருக்கத்தை அதிகரித்து டெங்கு காய்ச்சலை உண்டாக்கும். மேலும், வீட்டில் உள்ள தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களைக் கொசு அண்டாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அடிக்கடி வெளியேற்ற வேண்டும். இது மாதிரி ஆரம்பக் கட்டத்திலேயே கொசுக்கள் பரவாமல் பல வழிமுறைகளைச் செய்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.