Skip to main content

"சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும்" - உ.பி அரசுக்கு மாயாவதி கோரிக்கை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Mayawati's request to UP Government

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு கட்சிகள் இடையே சாதிய ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், தன் கட்சி அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உதவ வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சமாஜ்வாதி கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி மட்டுமல்ல, தலித் மக்களுக்கு எதிரான கட்சியும் கூட. கடந்த பொதுத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, சமாஜ்வாதி கட்சியின் தலித் விரோத உத்திகள் மற்றும் குணத்தை பகுஜன் சமாஜ் கட்சி மாற்ற முயற்சித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, சமாஜ்வாதி கட்சி மீண்டும் தனது தலித் விரோத உத்தியை கொண்டு வந்தது. 

இப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் யாருடன் கூட்டணி பற்றி பேசினாலும், அவரது முதல் நிபந்தனை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது, எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதும், எனது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். தண்ணீர், மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டன. 

பகுஜன் சமாஜ் மாநில அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கு சில தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. இந்த பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆலோசனைகளின் பேரில், கட்சித் தலைவர்கள் இப்போது பெரும்பாலான கட்சிக் கூட்டங்களை அவர்களது இல்லத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பெரிய கூட்டங்களில், கட்சித் தலைவர்கள் அங்கு சென்றதும், பாதுகாப்புப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய கட்சியின் மாநில அலுவலகத்திற்கு பதிலாக வேறு எங்காவது பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடுகளை செய்யுமாறும், இல்லையெனில் எந்த நேரத்திலும் இங்கு அசம்பாவிதம் நிகழலாம் என்றும் உ.பி. அரசுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், தலித் விரோதப் போக்கை அரசு கடுமையாகக் கையாள வேண்டும் என்றும் கட்சி கோருகிறது" என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.