Skip to main content

பத்திரிகையாளருக்கு 12 மாத சிறை தண்டனை! பா.ஜ.க. அரசை விமர்சித்ததால் அடக்குமுறை!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
Kishore

 

 

 

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், அரசை விமர்சித்துப் பேசியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் பட்டுள்ளார். 
 

பா.ஜ.க. ஆளும் மாநிலமான மணிப்பூரின் இம்பாலைச் சேர்ந்தவர் கிஷோர்சந்திரா வாங்கேம். இவர் ஐ.எஸ்.டி.வி. நெட்வொர்க் சேனலின் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி ஜான்சிராணியின் பிறந்ததின விழாவில் முதல்வர் பிரென் சிங் மணிப்பூரின் விடுதலை இயக்கத்தையும், ஜான்சிராணியையும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். 


ஜான்சிராணிக்கும் மணிப்பூர் விடுதலை இயக்கத்திற்கும் எந்தவிதம் தொடர்புமில்லை என்று கொந்தளித்த கிஷோர்சந்திரா, முதல்வர் பிரென் சிங்கின் பேச்சைக் கண்டித்ததோடு, “அவர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் கைப்பாவை” என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார். 
 

இதையடுத்து, கிஷோர்சந்திராவை மணிப்பூர் காவல்துறை நவ.21ஆம் தேதி கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அங்கு லோக்கல் மாஜிஸ்திரேட் பெயில் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 24 மணிநேரத்தில் மஃப்டியில் வந்த காவல்துறையினர் கிஷோர்சந்திராவை எஸ்.பி. அழைத்துவரச் சொன்னதாகக்கூறி கூட்டிச்சென்றுள்ளனர். அடுத்த ஐந்தாறு நாட்களுக்கு அவரைப்பற்றி எந்தத் தகவலும் கூறாமல், நவ.29 அன்று வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கிஷோர்சந்திராவை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 

இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த கிஷோர் சந்திரா பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் வெளியிட்ட வீடியோ பணி நிமித்தமானதல்ல என்பதை, மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனைக் குழு, இந்த விவகாரத்தில் கிஷோர் சந்திராவை சிறை தண்டனை விதிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது கிஷோர் சந்திராவிற்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

முன்னதாக கிஷோர்சந்திராவின் மனைவி ரஞ்சிதா பேசுகையில், “என் கணவர் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. முதல்வரை நோக்கி கேள்வியெழுப்பவும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கவும் உரிமை தந்துள்ள ஜனநாயக மண்ணில் தன் கருத்தைப் பதிவுசெய்தது தவறாகாது” எனக் கூறியிருந்தார். தற்போது மத்திய அரசிடம் முறையிட்டும் அவரது குரலுக்கு யாரும் செவிமடுக்கவில்லை. 

 

யாராக இருந்தாலும் குற்றங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது பத்திரிகையாளர்களின் பணி. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டதற்காக, நமது நக்கீரன் ஆசிரியர் மீது தேசவிரோத வழக்குப்போட்டு கைதுசெய்தது காவல்துறை. அதில் சட்டப்போராட்டம் நடத்தி கைது நடவடிக்கையை முறியடித்ததோடு, தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவர போராடி வருகிறது நக்கீரன். 
 

அரசைக் கேள்வியெழுப்பினாலோ, குற்றம்சாட்டினாலோ, விமர்சித்தாலோ தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. பத்திரிகையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்கவிட்டு தேசத்தில் எதைப் பாதுகாக்கப் போகிறார்களோ? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.