Skip to main content

"நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருக்கும்போதே எங்களுக்குத் தெரியும்..." - மல்லிகார்ஜுன கார்கே எம்.பி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

mallikarjuna kharge talks about rahul gandhi current situation 

 

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத்  தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில், "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சையே கடவுளை அடையும் வழி ஆகும்" என மகாத்மா காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா காந்தி, "எனது சகோதரர் உண்மையைப் பேசி வந்தார். இனியும் அவ்வாறே தொடருவார்" எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "ராகுல் காந்திக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும். இது போன்று ஏதாவது நடக்கும் என்று. சட்டம் மற்றும் நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக சட்டப்படி போராடுவோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்