
இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (22/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359- லிருந்து 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435- லிருந்து 3,583 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300- லிருந்து 48,534 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66,330 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 41,642 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,726 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,454 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் 13,967, குஜராத்தில் 12,905, டெல்லியில் 11,659, ராஜஸ்தானில் 6,227, மத்திய பிரதேசத்தில் 5,981, உத்தரப்பிரதேசத்தில் 5,515, ஆந்திராவில் 2,647, தெலங்கானாவில் 1,699, கர்நாடகாவில் 1,605, கேரளாவில் 690, புதுச்சேரியில் 20 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.