நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் 6 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மக்கள் முன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "விடுதலைக்காக போராடியவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் இந்த கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. சேவை செய்வதற்கு மக்கள் அளித்த வாய்ப்புகளில் ஒரு இழையை கூட விட்டுவைக்காமல் பணியாற்ற உறுதியளிப்போம். காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாக்கப்பட்டது.
நம் நாட்டின் பாதுகாப்பு படைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி இனிமேல் இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்தப் பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைவராக இருப்பார். இது நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை மேலும் வலுவானதாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.