Skip to main content

சந்திரபாபு நாயுடு கைது; ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Chandrababu Naidu arrested Total Andhra Pradesh blocked

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தனர்.

 

அதே சமயம் கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே விசாரணைக்காக சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. சந்திரபாபு நாயுடு அவருடைய அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக சிறைக்குச் செல்ல இருப்பதால் இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக செல்வது போன்றவற்றுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர், ஜனசேனா கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்