Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பரபரப்பு கடிதம்!

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Central minister sensational letter to CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த 27 ஆம் தேதி (27.08.2024) கடிதம் ஒன்றை  எழுதியிருந்தார். அதில் ‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (30.08.2024) பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தேசியக் கல்விக் கொள்கை - 2020 இன்படி (NEP - 2020) மாற்றத்தக்கப் பலன்களை வடக்கு முதல் தெற்கு மற்றும் கிழக்கு முதல் மேற்கு வரை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பெறுவதை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை  மத்திய அரசு முழுமையாக ஆதரிக்கிறது. உண்மையில், பன்மொழி மற்றும் தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்க மத்திய  அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Central minister sensational letter to CM MK Stalin

உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே பழமையான மொழியாகவும் தமிழ் உள்ளது என்பது தேசியப் பெருமைக்குரியது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடையே நமது பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார சங்கமத்தைக் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சகம் சார்பில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி, காசி தமிழ்ச் சங்கமும், சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், தமிழ் மொழியைக் கற்க வசதியாக ஒரு பிரத்தியேக தமிழ் சேனல் ஜூலை 29, 2024 அன்று தொடங்கப்பட்டது.  2024-25 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில அரசு உறுதியளித்தது, இருப்பினும் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான முக்கிய பொறுப்புகளைத் தமிழகத்தின் வரைவு தவிர்க்கப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமரின் ஸ்ரீ (PM SHRI - Prime minister Schools for Rising India) திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு இன்னும் கையெழுத்திடவில்லை.

தேசியக் கல்விக் கொள்கை இணைந்த சமக்ரா சிக்ஷா திட்டத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்கவும் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தை மாநிலம் ஏற்றுக்கொள்வது முக்கியம் ஆகும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வளர்க்கும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக அரசு அளித்த உறுதிமொழியின்படி, பிரதமரின் ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்