Skip to main content

தங்கை மீது பாசம் காட்டிய பெற்றோர்... கோபத்தில் ஐந்து வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

andhra child incident

 

 

தனது பெற்றோர் புதிதாகப் பிறந்த தனது தங்கை மீது பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த ஐந்து வயது சிறுமி, தனது தங்கையை நீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில், 11 மாதங்களுக்கு முன்னர் மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூவரும் தங்களது வீட்டில் வசித்துவந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. இதனால் அச்சமடைந்த தாய் காவியா அக்கம்பக்கத்தில் தனது குழந்தையைத் தேடியுள்ளார். எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காததை தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பின்னர், வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் எனவே தங்கையைத் தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும், அக்கா நிர்மலா அப்பாவியாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயும், போலீஸாரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். பின்னர், குழந்தை நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் முடிவில் போலீஸார் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்