Skip to main content

டெல்லிக்கு விரைந்தார் நயினார் நாகேந்திரன்!

Published on 07/04/2025 | Edited on 07/04/2025

 

nainar Nagendran rushed to Delhi

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தது பேசு பொருளாகி  இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே சமயம்  கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தான் காரணம் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தன் பாஜகவின் தற்போதைய மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கு அடுத்த நாளே டெல்லியில் முகாமிட்டனர். இதனால் தமிழக பாஜக தலைவர் விரைவில் மாற்றப்படுவார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு வசதியாகத் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதற்கான இறுதி ஆலோசனை டெல்லியில் நாளை மறுநாள் (09.04.2025) நடைபெற உள்ளதாகவும் அன்றைய தினமே இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவருக்கான பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,  கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் நயினார் நாகேந்திரன் முதலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று (07.04.2025) இரவு திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள், அக்கட்சியினர் மத்தியில் எழும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பெயரில் நயினார் நாகேந்திர டெல்லிக்குச் சென்றுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மத்திய அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் நாளை (08.04.2025) சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற பாராளுமன்ற  மக்களவைத் தேர்தல் நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாயை ரயிலில் கொண்டு செல்ல முயன்ற வழக்கின் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நயினார் நாகேந்திரன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்