
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு வேறு நோய்களுக்கான மருந்துகளே கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் கிராமத்தில் போனிகி ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுதுவதாக தகவல் பரவியது. ஆந்திரா எம்.எல்.ஏ ஒருவரே குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துவதாகத் தனது தொகுதிக்குள் விளம்பரப்படுத்தினார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், கரோனா கட்டுப்பாடுகளை மீறி மருந்து வாங்க குவிந்தனர். இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆந்திர அரசு, அந்த ஆயுர்வேத மருந்தின் மூலக்கூறுகள் குறித்து ஆராய சித்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்தது. இதுகுறித்த தகவல் அறிந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தையும், மத்திய ஆயுஷ் அமைச்சரையும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஆந்திர அரசின் நிபுணர் குழுவுடன் இணைந்து ஆயுர்வேத மருந்தை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவக் குழு ஆந்திராவிற்கு விரைந்தது.
இத்தொடர்ச்சியாக கிருஷ்ணம்பட்டினத்திலிருந்து அந்த மருந்தை நிபுணர்கள் குழு ஆய்வுக்காக எடுத்துச்சென்றது. அதேநேரத்தில் இந்த மருந்தைப் பொதுமக்களுக்கு வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆயுர்வேத மருந்து பாதுகாப்பானது என்றும் தீங்கு விளைவிக்காதது என்றும் நிரூபணமானதால் அதற்கு ஆந்திர அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்த மருந்து கரோனவை குணப்படுத்துகிறதா என்பது குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதேநேரத்தில் போனிகி ஆனந்தையா வழங்கிய கண் சொட்டு மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.