
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, “ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை” எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், “இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்க என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது.
தமிழக காவல் துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை” எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்டு ராஜேந்திர பாலாஜி மீது 3 பிரிவுகளின் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிஷ்லே குமார் சிங் விசாரிப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (17.03.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ராஜேந்திர பாஜாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன?. இது பற்றி ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குத் தமிழக அரசு சார்பில், “கோப்புகள் மொழிமாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் அவகாசம் தேவை என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “நீங்கள் இந்த விவகாரத்தைத் தாமதப்படுத்துகிறீர்களா” என ஆளுநர் தரப்புக்குச் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், “மொழிபெயர்ப்பு கேட்பதன் மூலம் ஆளுநர் தரப்பில் இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்த முயற்சிக்கிறது எனக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோப்புகளை 2 வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தரத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

மொழிபெயர்ப்பை வழங்கியதும் ஆளுநர் உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கில் சி.பி.ஐ. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக இது தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.