Skip to main content

”பழங்குடியின மக்களை வன்முறைக்கு தூண்ட நாங்கள் விரும்பவில்லை”- சென்டினல் பழங்குடியின மக்கள் குறித்து டிஜிபி

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
tribes


கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவிலுள்ள வடக்கு சென்டினல் தீவில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்து வரும் சென்டினல் பழங்குடியின மக்களுக்கு மதத்தை போதிக்க சென்றதாக சொல்லப்படும் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், சென்டினல் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார். ஆலனை அந்த பகுதிக்கு  அழைத்து சென்ற மீனவர்கள், பழங்குடியின மக்கள் கொன்றதாக போலிஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ஜான் ஆலனின் உடலை மீட்க இந்திய கடல்படை அத்தீவின் கடலோர பகுதிக்கு சென்றது. ஆனால், தீவின் கடலோர பகுதியிலேயே பழங்குடியின மக்கள் வில்லுடனும் அம்புடனும் நின்றுகொண்டிருந்ததால், இந்திய கப்பல்படை வீரர்கள் பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
 

ஆலனின் மரணம் குறித்து வெளியுலகிற்கு தெரிந்தவுடன், சென்டினல் பழங்குடியின மக்களின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பலர் முயற்சி செய்து வருகின்றனர். அவரது உடலை மீட்க நாங்கள் பல வழிகளை உருவாக்கினோம். ஆனால், அவை அனைத்தும் தோல்விலேயே முடிந்தது. இதற்கு மேலும் அவரது உடலை மீட்க முயற்சித்தால், பழங்குடியின மக்களை வன்முறைக்கு தூண்ட நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் நம்முடைய பொக்கிஷம் போன்றவர்கள் என்று அந்தமான் நிக்கோபார் தீவுகளின் டி.ஜி.பி தேபேந்திர பதக் தெரிவித்துள்ளார்.
 

”அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினர் ஆலன் உடலை மீட்க அந்த பகுதிகளுக்கு செல்வதால் மேலும் தீங்குகளே ஏற்படும். இதனால் பெரிய அளவில் பதற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆலன் உடலை மீட்கும் முயற்சிகளை உடனடியாக கைவிடுவதே நல்லது” என்று சில மானுடவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்டினலை அடுத்த சோம்பன்; வாக்களிக்க வைத்த தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Somban next to Sentinel; The Election Commission held the vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.  சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம்.  வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.

அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும்  அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்  சோம்பன் மக்களிடம்  வாக்களிப்பதின்  அவசியத்தை  உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

“இது இனப்படுகொலைக்குச் சமம்” - இந்திய அரசை எச்சரிக்கும் ஆர்வலர்கள்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
andaman and nicobar islands shompen people issue

இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் வங்கக்கடலில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 572 குறுந்தீவுகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 36 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சில தீவுகளில் இன்னமும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன் காரணமாக சில தீவுகள் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு தீவுகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அங்கு வெளிநபர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இப்படி தடை செய்யப்பட்ட செண்டினல் பழங்குடியின மக்கள் இருக்கும் தீவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜான் அலன் சாவ் (27) எனும் மத போதகர் ஒருவர் அனுமதியின்றிச் சென்று, அங்கு செண்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்ததை அடுத்து சில மாதங்கள் அந்தமானில் இருக்கும் பழங்குடியின மக்கள் குறித்தும் அந்தத் தீவுகள் குறித்தும் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டுவந்தது. 

andaman and nicobar islands shompen people issue

தற்போது, இந்திய அரசு மேற்கொண்டுள்ள புதியத் திட்டத்தினால் வங்கக்கடலில் அமைந்துள்ள நிக்கோபார் தீவு குறித்தான பேச்சுகள் எழுந்துள்ளன. 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிக்கோபார் தீவில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 9 பில்லியன் டாலர் முதலீடு மூலம் நிக்கோபார் தீவில் ராணுவ முகாம், வணிக மேம்பாடு, சரக்கு துறைமுகம், ராணுவம் மற்றும் பயணிகள் விமானநிலையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மெகா திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சீன வளர்ச்சிக்கு எதிராக இந்தியாவின் வளர்ச்சியை நிலை நிறுத்த இந்த மெகா திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் தீவை இந்தியாவின் ஹாங் காங் எனும் அளவிற்கு மேம்படுத்தவும் இந்தத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் அங்கு மக்கள் தொகையும் அதிகளவில் பெருகும் என இந்திய அரசாங்கம் எண்ணுகிறது. 

கடந்த 20ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் தெற்கு முனையான நிக்கோபார் தீவில் இருக்கும் இந்திரா பாய்ண்டுக்குச் சென்றுவந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 

andaman and nicobar islands shompen people issue

இந்திய அரசின் இந்த முடிவிற்கு தற்போது இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், சமூக அமைப்புகள் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துவருகின்றனர். அந்த எதிர்ப்பில் அவர்கள், இந்தத் திட்டம் அங்கு வசிக்கும் பூர்வக்குடி பழங்குடி மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என அச்சம் கொள்கின்றனர். 

உலகில் உள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 39 ஆய்வாளர்கள் அவர்கள் அச்சம் குறித்தும், நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடி இனமான சோம்பென் இன மக்களை காக்கவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதம்:

மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் முர்மு அவர்களுக்கு, 

இனப் படுகொலை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற நாங்கள், இந்தக் கடிதத்தின் மூலம் எங்களின் வருத்தத்தையும் பெரும் கவலையையும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்திய அரசு நிக்கோபார் தீவில் மேற்கொள்ளப்போகும் திட்டத்தின் மூலம், அங்கு வசிக்கும் பழங்குடி சமூகமான சோம்பென் இனம் அழியும் அபாயம் ஏற்படும். இந்தியாவின் ஹாங் காங் எனும் அழைக்கப்படும் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துவது, சோம்பென் இனத்தை இனப்படுகொலை செய்வதற்கு சமம். இயற்கையும் வளமும் நிறைந்த நிக்கோபார்த் தீவில் பல நூற்றாண்டுகளாக சோம்பென் பழங்குடி மக்கள் வெளியுலக தொடர்பு ஏதும் இன்றி அமைதியான வாழ்வை வாழ்ந்துவருகின்றனர். 

andaman and nicobar islands shompen people issue

ராணுவ முகாம், வணிக மேம்பாடு, சரக்கு துறைமுகம், ராணுவம் மற்றும் பயணிகள் விமானநிலையம், தொழிற்பேட்டை, எரிசக்தி நிலையம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது சோம்பென் இன மக்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு சமம். இது சர்வதேச இனப்படுகொலையாக கருதப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், அந்தத் தீவில் 8,000% அளவிற்கு அதாவது, 6,50,000 வரை மக்கள் தொகை கூடும். அதேசமயம், பூர்வக்குடி மக்களான சோம்பன் இன மக்கள் தொகை கடும் அழிவை சந்திக்கும். 

சோம்பென் இன மக்களுக்கு மற்றொரு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவது, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அவர்களிடத்தில் நம்மிடமிருந்து பரவக்கூடிய தொற்று எளிதில் அவர்களை பாதிக்கக்கூடும். இதன் மூலம் அவர்கள் பெரும் அளவில் மரணிக்க நேரிடும். அவர்களை அழிவில் இருந்து காப்பதற்கு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். எனவே நாங்கள், இந்திய அரசையும், இது தொடர்புடைய அதிகாரிகளையும் இந்த மெகா திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளனர். 

இப்படியான எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், ஒன்றிய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பனண்டா சோனாவால், எதிர்ப்புகள் எழுவது உண்மைதான் ஆனால், நாங்கள் அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மாற்று சிந்தனையே இல்லை. என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், எதிர்ப்புகள் வந்தாலும் இந்திய அரசு நிச்சயம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. 

அதேபோல் பழங்குடியினர் நல அமைச்சர் அர்ஜூன் முண்டா, “இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் பல்வேறு அமைச்சகங்களால் மிகவும் தீவிரமாகப் பார்க்கப்பட்டது. அந்த இடம் மற்றும் அந்த மக்களின் புனிதத்தன்மையைப் பேணுவதற்கு இந்தத் திட்டம் மிகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.