Skip to main content

நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் - அதிர்ச்சி அளித்த கேரளா!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

mk stalin pinarayi vijayan

 

முல்லைப்பெரியாற்றில் அமைந்துள்ள பேபி அணையை வலுப்படுத்துவதற்காக அங்குள்ள 15 மரங்களை வெட்ட தமிழ்நாடு அரசு நீண்டகாலமாக அனுமதி கோரி வந்தது. இந்தநிலையில், சமீபத்தில் கேரள அரசு அந்த 15 மரங்களை வெட்ட அனுமதியளித்தது.

 

இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார். இந்தநிலையில், கேரள அரசு 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தியுள்ளது.

 

15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி உத்தரவை கேரளாவின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் பிறப்பித்த நிலையில், அந்த உத்தரவு அரசுக்குத் தெரியாமல் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் தவறு நிகழ்ந்துள்ளதாகவும் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளதாவது, “(வனத்துறை அதிகாரியின்) இந்த முடிவு குறித்து முதல்வர் அலுவலகத்திற்கோ, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கோ, வனத்துறை அமைச்சகத்திற்கோ தெரிவிக்கப்படவில்லை. இதில் தவறு நிகழ்ந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற அனுமதிகளை வழங்க வனத்துறைக்கு அதிகாரமிருந்தாலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில்கொள்ளும்போது, முதல்வர் அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் முன் ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற முடிவை எடுத்திருக்கக் கூடாது.” இவ்வாறு அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.

 

மரங்களை வெட்ட முதலில் அனுமதியளிக்கப்பட்டு, பின்னர் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்