
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை(29.3.2025) அன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருது விடும் திருவிழாவில் எருது முட்டியதில் மாடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் புரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (37) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த ரஞ்சித் குமாரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் உயிரிழந்தார். எருது விடும் திருவிழாவின் போது இளைஞர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எருது விடும் நிகழ்ச்சிக்கு சரியான முன்னேற்பாடுகள் செய்துள்ளதா? என்று கவனிக்காமல் விட்டதாலே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.