Skip to main content

கத்தார் கொடுத்த தீர்ப்பு; மத்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

nn

 

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடம் புதிய நீர் மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'.  இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது. இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் எட்டு பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றச்சாட்டில் சிக்கிய அல்தாரா நிறுவனமும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 

இந்நிலையில் இந்த விவகாரத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு சட்ட ஆதரவு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கத்தாரில் எட்டு கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளி வருவதற்காக காத்திருக்கிறோம். எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்