Skip to main content

’’வார்த்தை அளந்து பேசுக!’’ - நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  வழக்கறிஞர் மீது வைகோ பாய்ச்சல்

Published on 04/05/2018 | Edited on 05/05/2018
vaiko court1

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி கொடுக்காததை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஆலைக்கு அனுமதி வழங்கும்படி மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர் ஜெயகுமார் எத்திராஜ் அமர்வில் இன்று விசாரணை தொடங்கியபோது வைகோ இந்த மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு மனுத் தாக்கல் செய்தார். 

 

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.

 

 நீதிபதி சுதந்திரம் “நீங்கள் எந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்?” என்று வைகோவை பார்த்துக் கேட்டார். அதற்கு வைகோ , “நான் 1994-இல் இந்த ஆலை தூத்துக்குடியில் நிறுவப்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து  போராடி வருகிறேன். 1997-இன் தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வழக்கு தொடுத்தேன். 2010 செப்டம்பர் 28-ஆம் நாள் அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. 2013 ஏப்ரல் 2-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், அந்தத் தீர்ப்பில் எதிர்காலத்தில் இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமாயின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டது. அத்துடன் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொது மக்கள் நலனுக்காக நான் போராடி வருவதாகவும் பாராட்டியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு சிப்காட் மூலம் நிலங்களைக் கையகப்படுத்துகிறது. அனைத்து கிராம மக்களும் விவசாயிகளும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போராடி வருகின்றனர். எனவே, இந்த விசாரணையில் நானும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,” என்று கூறினார். 

 

vaiko court

 

உடனே நீதியரசர் சுதந்திரம் “விசாரணையில் வைகோ பங்கேற்கலாம்,” என்று அறிவித்தார்.

 

 இன்றைக்கே தங்கள் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறியதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். 

 

ஆலை நிர்வாகம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள கோப்புகளின் பிரதிகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பின்னரே ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று வைகோ கூறினார். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர், வைகோவின் வாதங்கள் குறித்து ஒரு வார்த்தையைக் கூறி பலமாக சத்தமாகப் பேசினார். உடனே “வார்த்தை அளந்து பேசுக!” என்று வைகோ அவரைப் பார்த்துச் சொன்னார். சற்று நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

court vaiko

 

“ஸ்டெர்லைட் வழக்கறிஞரைப் பார்த்து நீங்கள் விரலை நீட்டி சொன்னீர்களா?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு வைகோ “ஆமாம்” என்றார்.

 

 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிறுவனம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அத்தரப்பு வக்கீல் கூறியபோது, இலட்சக்கணக்கான மக்களின் உயிரோடு ஸ்டெர்லைட் விளையாடுகிறது என்று வைகோ கூறினார்.

 

 நீதிபதி வைகோவைப் பார்த்து “வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசைத் தூக்கிலிருந்து காப்பாற்ற வழக்கறிஞர் என்.டி. வானமாமலையிடம் நீங்கள் வந்தபோது அவரோடு வக்கீலாக இருந்த நான் உங்களைச் சந்தித்தேன். உங்களை நன்றாக அறிவேன். பொறுமையாக இருங்கள்” என்றார். 

 

பின்னர், வழக்கு விசாரணை மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

ஒரு கொள்கைவாதியின் தவறான முடிவு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamoorthy passed away

திராவிட இயக்கத்தின் கொள்கை பற்றாளராகத் தமிழ் மொழி, இனத்தின் மீது அளவு கடந்த விசுவாசியாக, அரசியல் என்கின்ற பொது வாழ்வில் நேர்மையான மனிதராகப் பெருவாழ்வு வாழ்ந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் வாழ்க்கை 28 ஆம் தேதி அதிகாலை முடிவுக்கு வந்தது.

ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி பள்ளி படிக்கின்ற வயதிலேயே அன்றைய சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெனாண்டர்ஸ் போன்ற தலைவர்கள் ஈரோட்டில் கூட்டம் நடத்தி அரசியல் வகுப்பு எடுத்தபோது அதில் கலந்து கொண்டவர். அடுத்து கல்லூரியில் படித்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் அப்போதே பொறுப்பேற்றார்.

கல்லூரி காலகட்டத்தில் தான் வைகோ அவர்களோடு இணைந்தார். இளமைப் பருவத்திலேயே திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து வந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. அப்போது வைகோவுடன் வந்த 9 மாவட்டச் செயலாளர்களில் இறுதி வரை வைகோவுடன் இருந்தவர் கணேசமூர்த்தி தான். ஒருமுறை எம்எல்ஏ, மூன்று முறை எம்.பி. என அரசியல் அதிகாரம் இவருடன் இருந்து வந்தது. மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். விவசாய விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு, உயர் மின் கோபுரம் மற்றும் ஐடிபிஎல் என எல்லா போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து செயல்பட்டவர்.

அதேபோல் தமிழீழ விடுதலைக்குத் துணையாக நின்று பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளை  ஆதரித்துப் பேசியதற்காக அன்றைய ஜெயலலிதா ஆட்சியில்  வைகோவுடன் கணேசமூர்த்தியையும்  பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமைதி, அன்பு, பொறுமை தனது அரசியல் வாழ்வில் எவ்வித அடாவடித்தனமும் செய்யாதது, அதேபோல் கொள்கையில் ஒரு சமரசமற்ற போராளியாய் வாழ்ந்தது என்பது அவருக்கு பெருமை தான்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி காலை ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் உயிர்க்கொல்லி மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் தேதி இறந்துவிட்டார். கணேசமூர்த்தியின் இறப்பு மதிமுக பொதுச் செயலாளரான வைகோ உட்படத் தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கும் மிகுந்த துயரத்தைக் கொடுத்திருக்கிறது.

அன்பு சகோதரரை இழந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்கப் பேசிய வைகோ,  எம்.பி சீட் வழங்காததால்தான் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. திமுகவிடம் இரண்டு சீட் கேளுங்கள் கிடைத்தால் நான் நிற்பதை பற்றி யோசிக்கலாம். இல்லை என்றால் துரை மட்டும் நிற்கட்டும் என்று கூறினார். கல்லூரிக் காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை இழந்துவிட்டேன் என்று நா தழுதழுக்க பேசினார்.