Skip to main content

கனமழை பாதிப்பு; அதிகாரிகளுக்கு முதல்வர் முக்கிய உத்தரவு!

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
Impact of heavy rain Chief Minister's important order to the officers

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை (14.12.2024) காலை 9 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 50 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 38 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் கில்லிமங்கலத்தில் 37 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அரியலூர் மாவட்டம் மின்சுருட்டி, கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனமழையால் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் செங்கோட்டை பகுதியில் உள்ள தமிழகம் கேரளா செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி டவுன் அருகே உள்ள காட்சி மண்டபம் சாலை முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை காரணமாக குளம், கண்மாய்கள் நிரம்பி நிரம்பியுள்ளனது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளன இதன் காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை பாதித்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் மழை நிலவரம், மழை பாதிப்புகள், நீர் திறப்பு குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் மழை பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் துறையின் செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

சார்ந்த செய்திகள்