Skip to main content

டெல்லியை வலிக்காமல் அடித்து, தமிழகத்தை வயிற்றில் அடிக்கும் உச்சநீதிமன்றம்! ராமதாஸ்

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
Supreme Court


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், டெல்லியை வலிக்காமல் அடித்து, தமிழகத்தை வயிற்றில் அடிக்கிறது உச்சநீதிமன்றம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 
 

தனது டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் ஒரு கேள்வி ஒரு பதில் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், 
 

கேள்வி: காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆணையிட்டிருக்கிறாரே. அடுத்து என்ன நடக்கும்?
 

பதில்:     உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, ‘‘ உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாம் அனைவரும் நடிகர்கள்’’ என்ற ஷேக்ஸ்பியரின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணக்கு வந்த போது, ‘‘ பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல’’ மத்திய அரசு வழக்கறிஞரிடம் மத்திய அரசுக்கு சாதகமாகவும், தமிழக அரசு வழக்கறிஞரிடம் தமிழக அரசுக்கு சாதகமாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் குழப்பம் தீர்வதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. இதனால் தீர்வு கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.
 

      காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16&ஆம் தேதி அளித்தத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மற்றொருபுரம் உச்சநீதிமன்ற நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக மத்திய அரசு விளக்கம் கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நீங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். அந்த உத்தரவுக்கு நீங்கள் பணிந்திருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நன்றாக ஆராய்ந்து நாங்கள் தீர்ப்பளித்திருக்கிறோம். ஆனால், காவிரிப் பிரச்சினையில் தீர்வு காணும் உறுதியை நீங்கள் காட்டவில்லை’’ என்று  மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுவரை நீதிமன்றத்தில் அனைத்தும் நன்றாகவே நடந்தது. அதன்பின்னர் நடந்த நிகழ்வுகள் ஐயத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

 

KRs


 

      காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை குறிப்பிட்டக் காலத்திற்குள் அமைக்காததற்காக மத்திய அரசைக் கண்டித்த நீதிபதிகள், அதற்குப் பிறகும் மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்திருக்கக் கூடாது. மாறாக, நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உச்சநீதிமன்றமே உருவாக்கி இதை 4 நாட்களில் செயல்படுத்துங்கள் என்று கூறியிருக்கலாம். இவ்வாறு உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவிட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவ்வளவு ஏன்? கடந்த 2016-ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி  உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வு ஆணையிட்டிருக்கிறது.
 

     ஆனால், நீதிபதிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தின் வரைவை தயாரித்து மே 3&ஆம் தேதி எங்களிம் தாக்கல் செய்யுங்கள் என்று ஆணையிட்டுள்ளனர். அவ்வாறு தாக்கல் செய்தாலும் கூட அதை உடனடியாக செயல்படுத்த ஆணையிட மாட்டார்களாம். மாறாக அதை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களிடம் கொடுத்து கருத்துக் கேட்பார்களாம். அதன்பிறகே இவ்விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்களாம். இது என்ன கொடுமை?
 

Cauvery


 

      காவிரி செயல்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் திரும்பத் திரும்பக் கேட்ட போது, காவிரி மேலாண்மை வாரியம் தான் செயல்திட்டம் என தலைமை நீதிபதி கூறிவிட்டார். அதன்பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்று, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பின் வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று கேட்ட போது, ‘‘ அனைத்தையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார். அந்த அமைப்பு தொழில்நுட்ப அமைப்பாக இருக்க வேண்டுமா? நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டுமா? என்று கேட்ட போது,‘‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் தீர்ப்பை நீங்கள் செயல்படுத்துங்கள்’’ என்று கூறிவிட்டனர். கூடவே நடுவர் மன்றத் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; எங்கள் தீர்ப்பு தான் முக்கியம்’’ என்றும் கூறிவிட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விளக்கம் கோரும் மனு மீதான ஆணையிலேயே இத்தனைக் குழப்பங்கள் இருக்கும் போது எவ்வாறு தீர்வு ஏற்படும்?
 

      உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்தியில் ஆளும் கட்சிக்கு கர்நாடக அரசியலில் லாபம் தேடித் தரும் வகையில் தான் அமைந்துள்ளது. அடுத்ததாக, எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி அதுகுறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் வரும் 3&ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யும். அந்த அமைப்பு கர்நாடகத்துக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும்  இருக்கும். இது குறித்த செய்திகள் பிரமாண்டமாக்கப்படும். கர்நாடகத்தின் உரிமைகளை மத்திய பாரதிய ஜனதா அரசு காப்பாற்றி விட்டதாக தோற்றம் ஏற்படுத்தப்படும். மத்திய அரசுக்கு எதிராக தமிழகமும் பொங்கி எழும். இந்த மாயத்தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு மே 12&ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாரதிய ஜனதா முயலும்.

 

ramadoss

      
அதன்பின் கோடை விடுமுறை முடிந்து ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும். இடைப்பட்ட காலத்தில் குறுவை சாகுபடிக்கு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.  ஆனால், உச்சநீதிமன்றத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் சாதக, பாதகங்கள் குறித்த வாதங்கள் தொடக்கத்திலிருந்து நடத்தப்படும். தமிழக அரசின் சார்பில் திறமையில்லாத வழக்கறிஞர்கள் சொதப்புவர். மணல் கொள்ளை சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு தில்லி சென்று தவம் கிடக்கும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த வழக்குக்காக எதையும் செய்ய மாட்டார். அதற்குள் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வந்து விடும். அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் நாள். அதற்குள் வழக்கு விசாரணை முடிந்திருந்தால்  அவர் தீர்ப்பளிப்பார். இல்லாவிட்டால் புதிய அமர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும்  வழக்கு விசாரிக்கப்படும். அது இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படும்.
 

     அதற்குள் இன்னும் பல ஆண்டுகளுக்கு குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், கடன் வாங்கி பயிரிட்ட சம்பா பயிர்கள் கருகுவதாலும் பாதிக்கப்பட்டு கடனாளி ஆகும் விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டோ, தூக்கு மாட்டியோ உயிரை விடுவார்கள். அடிமைகளும், பினாமிகளும் ஆட்சி செய்தால் இது தானேற் நடக்கும். மத்திய அரசை கண்டிப்பது போல வலிக்காமல் அடித்தும், நம்மை வயிற்றில் கொடூரமாக அடித்தும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். 

வாய்மையே வெல்லட்டும்!

இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.