Skip to main content

சசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
actor karunas

 

அ.தி.மு.க.வில் பல தரப்பு கருத்து பிரதிபலிக்கப்படுகிறது, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம், முக்குலத்தோர் புலிப்படை வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் என மதுரையில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேட்டியளித்தார்.

 

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார்.

 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ்: விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும். வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் 2 தொகுதிகள் கேட்கப்படும் என்றார். 

 

அ.தி.மு.க.வில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் எனவும், அ.தி.மு.க.வில் சசிகலா இடம்பெறுவது குறித்து கருத்துச் சொல்ல இயலாது என்றார். 

 

Ad

 

வேளாண்மையை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள், அவர் அரசியலுக்கு வந்தால்தான் எதுவும் சொல்லமுடியும், யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” - கருணாஸ் மீண்டும் புகார்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
karunas compalint against bayilvan ranganathan regards trisha admk av raju issue

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏ.வி ராஜுக்கு த்ரிஷா தரப்பில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து கருணாஸ், தன் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னரிடம் கருணாஸ் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி பரப்பப்படும் பொய்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளம்பரத்துக்காக பொய்யான செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.