Skip to main content

“மணிப்பூரில் இன்டர்நெட்டை துண்டித்தது  இதற்குத் தான்” - திருமுருகன் காந்தி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Thirumurugan Gandhi  Interview

 

மணிப்பூர் பிரச்சனை குறித்துப் பல்வேறு கருத்துக்களை மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

 

கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தாமல் சாதாரண மக்கள் மீது அடக்குமுறையை இவர்கள் ஏவி விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய குரலை வெளிப்படுத்த அவர்களுக்கு இருப்பது சமூகவலைத்தளங்கள்தான். அதையும் துண்டித்து விட்டார்கள். காஷ்மீரிலும் இதைத்தான் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதும் இதைச் செய்தார்கள். மோடி இதைப் பற்றிக் கவலையே படாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். 

 

வீடியோ முதற்கொண்டு அனைத்தையும் உள்துறை அமைச்சர் நிச்சயம் முன்பே பார்த்திருப்பார். பிரதமரிடமும் அனைத்தையும் சொல்லியிருப்பார்கள். இதன் பிறகு தான் மோடி அமெரிக்காவுக்கும்,பிரான்ஸ் நாட்டுக்கும் சென்றார். கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். இதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், இந்தியாவின் உச்ச பதவியில் இருக்கும் ஒருவரால், ஊர் சுற்ற முடியும் என்றால் அதைவிடக் கொடூரமான மனநிலை எதுவும் இருக்க முடியாது. எப்படி அவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று தெரியவில்லை.

 

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை பயங்கரவாத அமைப்புகளோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் மோடி. அனைத்து இடங்களிலும், இஸ்ரோ உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் இந்தியா என்கிற பெயர் இருக்கிறது. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா? இந்தியா என்கிற பெயரை பயங்கரவாதிகளோடு ஒரு பிரதமர் ஒப்பிட்டுப் பேசுகிறார் என்றால், அவர் எந்த நாட்டுக்குப் பிரதமராக இருக்கிறார்? பாஜகவோடு கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இப்போது எதிர் முகாமில் இருக்கின்றன. கட்சிகளை உடைத்துவிட்டு வந்தவர்கள் தான் பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள்.

 

பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய மாநிலமோ, மிகப்பெரிய கூட்டணியோ இப்போது இல்லை. பாஜக கூட்டணியில் இப்போது இருக்கும் ஒரே பெரிய கட்சி அதிமுக தான். திமுகவின் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தவறானது. தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கலாம். ஆனால் அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இதைப்பார்த்து பெரிதும் பயந்திருப்பது அதிமுகவினர்தான். அதிமுக தலைவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரிப்பதுதான் பாஜகவின் பாணி. இதை குஜராத்திலிருந்து பாஜக தொடங்கியது.

 

மக்களைப் பிரிப்பதுதான் பாஜகவின் வேலை. தமிழ்நாட்டில் இயங்கும் சாதி சங்கங்களுக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. சாதிப் பெருமையை வளர்த்துவிட இவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறித்த அடையாளங்கள் வெளியே தெரியாமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எது இந்துக்களின் வீடு, எது இந்துக்கள் அல்லாதவர்களின் வீடு என்கிற கணக்கெடுப்பை செய்யும் பணியை ஆர்எஸ்எஸ் தற்போது மேற்கொண்டு வருகிறது. பெரிய கலவரங்களை உருவாக்குவதற்காகத் தான் அவர்கள் இதைச் செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பூசாரிகள்தான் இன்று மாரியம்மன் கோவிலிலும் இருக்கின்றனர். அங்கும் அவர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்கள். 

 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பள்ளிகளில் குழந்தைகளுக்கும் பயிற்சி தருகிறார்கள். எனவே பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோவில் திருவிழாக்களில் இந்து முன்னணியின் கொடி பறக்கிறது. ஆனால் அவர்கள் திருவிழாவுக்காக ஒரு ரூபாய் கூட தருவதில்லை. இதையெல்லாம் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழ்நாடும் ஒருநாள் மணிப்பூர் போல் மாறும். ஆர்எஸ்எஸ் என்பது தமிழர்களின் இயக்கம் அல்ல.