Skip to main content

தேஜஸ் ரயில் தமிழ்நாட்டிற்குத்தான் புதிது... இந்தியாவிற்கு அல்ல...

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

தேஜஸ் அதிவேக விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். சென்னை-மதுரை இடையேயான 495 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் இணைக்கிறது. 2018-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவையைக்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வருகிறது.

 

tejas

 

தேஜஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்:


தேஜஸ் ரயில் மொத்தம் 15 பெட்டிகள் கொண்டிருக்கிறது. 
 

ஒரு உயர் வகுப்பு பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அதில் அடங்கும்.
 

உயர்வகுப்பு பெட்டியில் இருபுறமும் எதிரெதிரே இரு இருக்கைகளோடு மொத்தம் நான்கு இருக்கைகள் ஒரு புறமும், அதேபோல் மற்றொரு புறமும் இருக்கிறது.
மற்ற பெட்டிகளில் பேருந்தில் அமைந்திருப்பதுபோல் வரிசையாக இருபுறமும் இரு இருக்கைகள் கொண்டிருக்கிறது. 

 

tejas


 

உயர் வகுப்பு பெட்டிகளில் எதிரெதிரே இருக்கும் இரு இருக்கைகளுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் மேசையில் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது. அது அந்த மேசையினுள் பதிந்து இருக்கும் வகையிலும், நமக்கு தேவை எனும்போது ஒரு பட்டன் மூலம் வெளியே வரவைத்து பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
 

மற்ற பெட்டிகளில் ஒவ்வொரு இருக்கைகளின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது. 
 

இந்த வீடியோ திரைகளில் ரயிலிலே கொடுக்கப்பட்டிருக்கும் வை-பை கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது பயணிகள் தங்களின் பென்ட்ரைவ் கொண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். 
 

ஒவ்வொரு பெட்டியின் நுழைவு வாயிலிலும் தானியங்கி டீ, காபி இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 
 

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே எல்.ஈ.டி. விளக்குகள்.
 

tejas

 

பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள்.
 

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
 

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியின் பக்கவாட்டில் செல்போன் சார்ஜர் வசதி.
 

உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.
 

இத்தனை சிறப்பு அம்சங்களும்கொண்ட இந்த ரயில் பெட்டியை தயாரித்தது சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். இரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை என்பது தனி சிறப்பு.
 

இன்று தொடங்கும் தேஜஸ் சொகுசு ரயில் சேவை நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னை-மதுரை இடையே பயனிக்கும் தேஜஸ் சொகுசு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

tejas

 

சென்னை - திருச்சிக்கு ஏசி வசதிகொண்ட அமரும் வசதி கொண்ட பெட்டிகளில் (சேர் கார்) ரூ.690,முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்குரூ.1,485 கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 
 

சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் ரூ.895, முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ரூ.1,940 எனவும், இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும்.
 

சென்னையிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயிலின் எண் 22671 மற்றும் மதுரையில் இருந்து சென்னை வரும் தேஜஸ் ரயிலின் எண் 22672. வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் தேஜஸ் ரயில் வாரந்தோறும் வியாழன் அன்று மட்டும் இயங்காது.
 

சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில், திருச்சிக்கு 10.23 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 10.25 மணிக்கு புறப்படும் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தை காலை 11.38 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு மதுரையை மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது. 


மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வரும் தேஜஸ் ரயில் எண் 22672, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு 3.28 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.50 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. அங்கிருந்து 4.52 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 

 
தேஜஸ் விரைவு ரயில் இந்தியாவிற்கு புதிதல்ல. தேஜஸ் ரயில் 2017-ம் ஆண்டு மே மாதம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மாலி வரை அந்த தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இங்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகளை பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்.சி.எஃப். எனும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த தேஜஸ் ரயில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயங்கிவருகிறது. இது 22119 மற்றும் 22120 எனும் ரயில் எண்ணில் இயங்கிவருகிறது. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மலி இடையேயான தூரம் மொத்தம் 551.7 கி.மீ. இந்த தூரத்தை மணிக்கு 56 கி.மீ எனும் அளவில் 8 மணி 30 நிமுடங்களில் இணைக்கிறது.

 

 

 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.