Skip to main content

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சர்வதேச மோசடி!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018


dr.annamalai-டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D.,
ஆஸ்திரேலியா

உலகிலேயே மிக அதிகமாக வெறுக்கப்படும் நிறுவனம்' அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம்தான். 2004-ல் அனில் அகர்வால் சாம்பியா நாட்டில் உள்ள, கே.சி.எம். (KCM - Konkola Copper Mines) எனப்படும் கொங்கோலா தாமிரச் சுரங்கத்தை ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்திடமிருந்து வாங்கினார். அன்றிலிருந்து, எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து, மக்களுக்கு கொடும் நோயைக் கொடுத்து, தாமிரத்தைக் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கொடூர நிறுவனம் வேதாந்தா ரிசோர்சஸ். இந்த நிறுவனத்தின் 61.9% பங்குகளை அனில் அகர்வாலும் அவருடைய குடும்பத்தினரும் வைத்திருப்பதனால், வேதாந்தா ரிசோர்சஸ் ஒரு பங்குச் சந்தை பொது நிறுவனமாக இருந்தாலும், அகர்வாலின் சொந்த நிறுவனமாகிறது. எந்தப் பங்குதாரரும் இவரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. அதேபோல், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் அகர்வாலும் அவருடைய குடும்பத்தினருமே பொறுப்பாவார்கள்.

sterlite

நதியில் உலோக விஷத்தை கலந்த வேதாந்தா

கே.சி.எம். நிறுவனம் அனில் அகர்வாலின் கட்டுப்பாட்டிற்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே தாமிரக் கழிவு விஷம் நிரம்பிய தண்ணீரை காஃப்யூ நதியில் திறந்து விட்டார்கள். 2006-ல், இரண்டுநாள் முழுக்க விஷத் தண்ணீர் ஆற்றில் கலந்ததால், தெள்ளத் தெளிவாக ஓடிக் கொண்டிருந்த காஃப்யூ நதி நீல நிறமாக, விஷமாக மாறியது. ஆற்று மீன்கள் செத்து மிதந்தன. சாம்பிய மக்கள் தொகையில் 50 விழுக்காடு மக்கள் காஃப்யூ நதி தீரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய விவசாயத்திற்கு அவர்கள் காஃப்யூ நதி நீரையே நம்பியுள்ளனர். அவர்களின் குடிநீரும் காஃப்யூ ஆற்று நீர்தான். இவற்றையெல்லாம் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் கே.சி.எம். நிறுவனம் தாமிர விஷக் கழிவு நீரை ஆற்றில் திறந்துவிட்டது. காஃப்யூ ஆற்று நீர் விஷமானது. சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்லாமல் மனித உரிமை மீறல் குற்றத்தையும் சேர்ந்தே வேதாந்தா ரிசோர்சஸ் செய்தது.

மக்கள் கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்கள். ஆலைக்கு அருகில் வாழ்ந்த மக்கள் இன்னும் கடும் பாதிப்பிற்கு ஆளானார்கள். சாம்பிய அரசாங்கம் வேதாந்தாவின் மீது குற்றம் சுமத்தியது. ஆனால், வேதாந்தா வழக்கம்போல் அதனை மறுத்தது. சர்வதேச நிறுவனங்கள் ஆய்வை மேற்கொண்டு வேதாந்தா ரிசோர்சசின் மீதே குற்றம் சாட்டின. வேதாந்தாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து தன்னுடைய நாசகாரச் செயல்களைச் செய்து வந்தது. இக்கொடுமைகள் வேதாந்தாவில் முதலீடு செய்திருந்த மாபெரும் நிதி நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

sterlite

நார்வே அரசு ஓய்வூதிய நிதியம்

நார்வே நாட்டு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியம் (Norway Government Pension Fund)உலகில் உள்ள பல பெரும் நிறுவனங்களில் மூலதனம் செய்கிறது. இந்நிதியத்தில் உள்ள நிதி 63 லட்சம் கோடி ரூபாய். வேதாந்தா ரிசோர்சசிலும் நார்வே அரசு ஓய்வூதிய நிதியம் முதலீடு செய்திருந்தது. வேதாந்தாவின் செயல்பாடுகள் நார்வே அரசின் “தொழில் நெறிமுறைக் குழுவின்’’ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. 2007-ல் நடத்தப்பட்ட ஆய்வில், தொழில் நெறிமுறைகளைக் கிஞ்சிற்றும் கடைப்பிடிக்காமலும், மனித உரிமைகளை மிதித்தும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை, குறிப்பாக நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவற்றை உயிரினங்களின் பயன்பாட்டிற்குத் தகுதியில்லாத வகையில் தொடர்ந்து மாசுபடுத்தி வருவதால், வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்வது முறையற்றது என்று அறிவித்தது.

இப்பரிந்துரையை ஏற்று, நார்வே நாட்டு நிதி அமைச்சகம் வேதாந்தா ரிசோர்சசை கருப்புப் பட்டியலில் சேர்த்தது. அதனால், நார்வே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியம், 2007-ல் வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்திருந்த தன்னுடைய மூலதனம் அனைத்தையும் திரும்பப் பெற்றது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தடையை நார்வே அரசின் நிதியமைச்சகம் இன்றுவரை நீடித்தே வருகிறது.

2016ஆம் ஆண்டு நார்வே தொழில் நெறிக்குழு தன் அறிக்கையில் வேதாந்தாவைக் கடுமையாக சாடியது. தன்னுடைய அறிக்கையின் பக்கம் 12-ல் எழுதியுள்ள கருத்து அருகே உள்ள படத்தில் சிவப்பு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

sterlite

தமிழாக்கம்: “2016ஆம் ஆண்டு தொழில்நெறிக் குழுமம் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்தது. இவ்வாய்வின் முடிவில், 2007-ல் என்னென்ன காரணங்களுக்காக இந்நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தொடர்வதால், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஒதுக்கி வைக்கவே முடிவு செய்துள்ளது’.

இந்த அறிக்கையினைத் தொடர்ந்து, நார்வே தொழில் நெறிக் குழுமத்தின் தலைவர் ஜான் ஆண்டர்சன், 2017ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி, வேதாந்தாவின் தலைமை அதிகாரி டாம் அல்பனீசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “"வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், ஸ்டெர்லைட் காப்பர் (தூத்துக்குடி), பாரத் அலுமினியம் கம்பெனி, லாஞ்சிகார் அலுமினா, கொங்கொலா தாமிரச் சுரங்கம் (சாம்பியா) ஆகிய நிறுவனங்களில் தொடர்ந்து திட்டமிட்ட மனித உரிமை மீறலும், சுற்றுப்புறச் சூழல் கேட்டையும் விளைவித்து வருவதால், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தில் மூலதனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டில் உள்ள மற்றொரு செல்வச் செழிப்பான நிதியம் நார்வே ஆயில் நிதியம். இந்த நிதியத்தில் இருந்த பணம், 2014 ஆம் ஆண்டு மதிப்பின்படி 56 லட்சத்து 70,000 கோடி ரூபாய். மேலே குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக இந்நிறுவனமும் தன்னுடைய மூலதனத்தை வேதாந்தாவில் இருந்து விலக்கிக் கொண்டது.

sterlite

இங்கிலாந்தும் அதிருப்தி!

இங்கிலாந்தில் உள்ள சர்ச் ஆஃப் இங்லேண்ட், வேதாந்தாவில் பெரும் முதலீடு செய்திருந்தது. ஆக்சன் எய்டு இன்டர்னேஷனல் (Action Aid International)  என்கிற தொண்டு நிறுவனம் ஏழ்மைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடி வரும் நிறுவனம். இந்நிறுவனம், சர்ச் ஆஃப் இங்லேண்ட் ஆணையர்களை சாம்பியாவிற்கு அழைத்துக் கொண்டு போய் வேதாந்தாவின் செயல்பாடுகளைக் காட்டியது. நேரில் பார்த்ததற்குப் பின்னர், சர்ச் ஆஃப் இங்லேண்டின் ஆணையர்கள், "வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் மனித உரிமைகளை மதிக்கவில்லை. இந்நிறுவனம் எதிர்காலத்திலும் மனித உரிமைகளுக்கும் தன்னுடைய நிறுவனங்கள் தொழில் செய்கிற இடங்களில் உள்ள உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கொஞ்சமும் இல்லாத காரணத்தால், வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்திருந்த 38 கோடி ரூபாய் மூலதனத்தைத் திரும்பப் பெறுகிறோம்' என்று அறிவித்து, அந்த முதலீட்டைத் திரும்பப் பெற்றது.

சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனமான ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International)  நிறுவனம் வேதாந்தாவின் மனித உரிமை மீறல் குற்றங்களையும், சுற்றுப்புறச் சூழல் குற்றங்களையும் கண்டித்து ஒரு கடுமையான அறிக்கை வெளியிட்டது. அதை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள ரௌண்ட்ரீ ட்ரஸ்ட் என்னும் சேவை நிறுவனம் வேதாந்தாவில் தான் முதலீடு செய்திருந்த 15 கோடி ரூபாய் மூலதனத்தை 2010-ல் திரும்பப் பெற்றது. அதேபோல், மார்ல்பரோ எதிகல் ஃப்ண்ட் மற்றும் மில்ஃபீல்ட் ஹவுஸ் ஃபவுண்டேஷன் (Marlborough Ethical Fund and Millfield House Foundation) என்னும் நிறுவனம், தன்னுடைய மூலதனமான 2.5 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றது. இவை அனைத்தும் 2010-ல் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

 

sterlite-closedsterlite

சாம்பியாவில் குடிநீர் மோசடி!

வேதாந்தா நிறுவனத்தினர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும், தேனை விட இனிப்பாகப் பேசுவதிலும் வல்லவர்கள். ஆனால், உலகத்தில் உள்ள மோசமான அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடிய அளவிற்கு மிக மோசமான அரசியல்வாதிகள். சாம்பியாவில் தங்கள் தாமிரச் சுரங்கத்திற்கருகே வாழும் மக்களுக்கு தங்களின் செலவிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று நீட்டி முழக்கியது வேதாந்தா. ஆனால், அதையும் சரிவரச் செய்யாமல் மக்களுக்கு நஞ்சு கலந்த தண்ணீரையே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று வழங்கியது. சர்வதேச தண்ணீர் சாட்சியம் (Water Witness International) என்கிற பொதுச் சேவை நிறுவனம், கே.சி.எம். சுரங்கத்திற்கருகே வாழும் மக்களுக்கு வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, 2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை பரிசோதித்து ஓர் அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கையில் தரப்பட்ட விவரங்களின்படி, தாமிரம், கோபால்ட், ஆர்சனிக், மேங்கனீஸ், இரும்பு உள்ளிட்ட எல்லா உலோகங்களுமே, சாம்பிய தண்ணீர்த் தரக் கட்டுப்பாட்டின்படி எல்லாமே அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து 5 முதல் 25 மடங்கிற்கும் மேல் அதிகமாகவே உள்ளன.

குடிநீரில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தாமிரத்தின் அளவு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி. கிராம். வேதாந்தா வழங்கி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சராசரியாக 4.5 மி. கிராமும் அதிகபட்சமாக 28 மி.கிராம் தாமிரமும் இருந்துள்ளன.

மேங்கனீஸ் என்னும் உலோகம் அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு 0.1 மி. கிராம். ஆனால், வேதாந்தா வழங்கி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்ததோ 1.5 மி.கி. அதாவது 15 மடங்கு அதிகம்.

சாம்பியா குடிநீர்த்தரக் கட்டுப்பாட்டின்படி கே.சி.எம். நிறுவனத்தைச் சுற்றிஉள்ள குடிநீரில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட இரும்பின் அளவு, 2010-2012 வரை ஒரு மி.கிராம். 2013லிருந்து 0.25 மி. கிராம். ஆனால் சராசரியாக வேதாந்தா வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 1.5 - 2.0 மி.கிராம் இரும்பு இருந்துள்ளது.

தூத்துக்குடியின் நிலை!

vendantaஇதே போன்ற நிலையில்தான் தற்போது தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தாமிரக் கழிவுகளில் (Copper slag) தாமிரம், ஆர்சனிக், குரோமியம், நிக்கல், காரீயம், சிங்க் போன்ற உலோகங்கள் உள்ளன. தாமிரம் பிரித்தெடுக்கப்படும் பொழுது, மிக அதிகமாக வெளியேறும் வாயு கந்தக வாயு (Sulphur dioxide) என்று சென்ற கட்டுரையில் எழுதியிருந்தோம். இந்த கந்தக வாயு மேகத்தில் செறிவோடிருக்கும் பொழுது மழை பொழியுமானால் அந்த மழை கந்தக அமில மழையாக இருக்கும். மழைத் தண்ணீர் அமில நீராக இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளில் உள்ள நச்சு உலோகங்கள் வேகமாகக் கரைக்கப்பட்டு நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடி நீரை விஷமாக்கும்.

உலகில் இவ்வளவு ஆய்வுகள் வேதாந்தாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றியும், சுற்றுப்புறச் சூழல் கேடுகளைப் பற்றியும் நடத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவின் கிரீன் கவுன்சில் அனுமதித்தது என்கிறார்கள். அதை விடக் கொடுமை நூறு கோடி ரூபாய் பணத்தை டெபாசிட்டாகப் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர், இந்த நாசகார ஆலையைச் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதுதான்.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆணையை வழங்குவதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும். 1) நாம் இங்கே தந்திருக்கின்ற ஆய்வுத் தகவல்களையும், மக்களையும் சுற்றுப்புறச் சூழலையும் கொல்வதையே தன் குணநலன்களாகக் கொண்டிருக்கும் அனில் அகர்வால், அவர் குடும்பத்தினர், அவருடைய நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை, வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காமல் இருந்திருக்க வேண்டும். 2) அப்படி இந்த வாதங்களை எல்லாம் எடுத்து வைத்திருந்தும் வேதாந்தாவிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் குமாரசாமிகள் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கடமை!

தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை நீதி மன்றத்தில் நிற்காது என்று பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். தமிழக அரசிடம் ஏராளமான அறிவியல் புள்ளிவிவரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் நிலத்தடி நீர் பிரிவு என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் பல திறமை வாய்ந்த புவியமைப்பியலாளர்களும், பொறியாளர்களும் இன்னமும் பணியாற்றி வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1970களில் இருந்து தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நிலத்தடி நீர் மாதிரிகளை ஒவ்வொரு மாதமும் சேகரித்து பரிசோதனை செய்து வைத்துள்ளனர். அந்த புள்ளிவிவரங்களின் மூலம், தூத்துக்குடியின் நிலத்தடி நீரின் தரத்தை அன்றிலிருந்து இன்றுவரை ‘வடிவமைத்தால்’  (Modelling)  தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியதற்கு முன்னரும், பின்னரும் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு கெட்டுப் போயுள்ளது என்பதை அறிவியல் ரீதியாக நீதி மன்றங்களில் நிரூபிக்க முடியும். செய்வார்களா? செய்வார்களா?





 

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“எத்தகைய ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
We will protect people from any danger says CM MK Stalin

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பல முறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம், ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும் இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில், ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு எனக் கூற முடியாது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டிருந்தது.

We will protect people from any danger says CM MK Stalin

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

We will protect people from any danger says CM MK Stalin

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ‘தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.