Skip to main content

சபரிமலை சர்ச்சை: கேரளாவில் என்ன நடக்கிறது...

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
kerala bandh


சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பு  அளித்ததை அடுத்து, பல பெண்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், சில பக்தர்களும், இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் போராட்டங்களை நடத்திகொண்டே வந்தனர். சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் எதிர்த்தாலும், அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. 


நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விடியற்காலையில் இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் போலிஸ் பாதுகாப்புடன் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வை அடுத்து, கோவிலின் நடை சாத்தப்பட்டது. பின்னர், கோவில் நம்புதிரிகள் பரிகாரம் செய்து கோவில் நடையை திறந்து வைத்தனர். இந்த சம்பவங்கள் நடைபெற்றதற்கு முந்தைய நாள் கேரளாவிலுள்ள இடதுசாரி கட்சி, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று  620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். இது போன்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையே இரு பெண்கள் தரிசனம் மேற்கொண்டனர். 
 

kerala bandh


இந்த நிகழ்வை அடுத்து பல இந்து அமைப்புகளும், பாஜகவை சேர்ந்த பெண்களும் போராட்டங்களில் ஈடுபட்டும், இன்று கேரள மாநிலத்தில் இதனை கண்டித்து பந்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சபரிமலையில் நடந்த கலவரத்தின்போது, போலிஸார் ஒருவர் காலால் இறுமுடி கட்டியுள்ள சாமியை எட்டு மிதிப்பது போன்று போட்டோஷாப் செய்து சமூக வலைதளத்தில் கேரள காவல்துறை மீது அவதூறு பரப்பிய ராஜேஷ் என்பவர் தற்போது இந்த நிகழ்வை கண்டித்து பாதி மீசை எடுத்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக போலிஸ் மீது அவதூறு பரப்பியதற்காக இவர் மீது வழக்கு தொடரப்படு, தற்போது பெயிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா என்ற இருவருக்கும் காவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், தரிசனம் செய்தவர்களில் ஒரு பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று தவறான செய்திகளை பரப்பிவருகின்றனர். இன்று கேரளா முழுவதும் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததை அடுத்து, முழு கடையடைப்பு நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறையால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெண்கள் இருவர் தரிசனம் செய்ததை அடுத்து நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியுள்ளார். 'சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசியலமைப்பு பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சபரிமலையை ஒரு கலவர களமாக  மாற்ற சங் பரிவார் அமைப்புகள் முயல்கின்றன. மேலும் நேற்று நடந்த கலவரத்தில் 7 காவல்துறை வாகனங்கள், 79 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 39 காவலர்கள் இப்போது வரை தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். மேலும் பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்' என கூறியுள்ளார்.


 

 

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.