Skip to main content

என்ன பேரு வைக்கலாம் கொடி எப்படி இருக்கனும் சொல்லுங்க... ரஜினியை ஏமாற்றியது யார்? வெளிவந்த தகவல்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

"நாளைக்கு தலைவரை பார்க்கப் போறீங்களா, போங்க, போங்க, இது தான் உங்களுக்கு தலைவரைப் பார்க்கும் கடைசி சந்தர்ப்பம். இப்ப இருக்கும் மா.செ.க்களில் ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரும் யோக்கியர்களா? யாராரு என்னென்ன திருட்டு, புரட்டு வேலைகள் பண்ணிருக்கீங்கன்னு தலைவருக்குத் தெரியும். அயோக்கியர்கள் அத்தனை பேரின் பதவிக்கும் தலைவர் வேட்டு வைக்கப் போறாரு.''

 

rajini



கடந்த 05—ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டத்தை ரஜினி நடத்தியதற்கு முதல் நாள், இப்படியொரு வாட்ஸ்—அப் தகவல் ர.ம.ம. குருப்புகளில் பரவி குபீர் கிளப்பியது. திருவண்ணாமலை கேசவன் என்ற பெயரில் வெளியான இந்த தகவல் ரஜினியின் பார்வைக்கும் போனது. இந்த வாட்ஸ்—அப் தகவல் வேறுவித விளைவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற முடிவுடன் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து, கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா மண்டபத்திற்கு புறப்பட்டார் ரஜினி.


10 மணிக்கு கூட்டம் என்றாலும் காலை 8 மணிக்கே அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர் மா.செ.க்கள். மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த மீடியாக்கள், மா.செ.க்கள் முன்பு மைக்கை நீட்டிய போது, "ஆளவிடுங்க சாமிகளா' என தெறித்து ஓடினார்கள். காலை 10.45 மணிக்கு மண்டபத்திற்குள் எண்ட்ரியானார் ரஜினி. வழக்கமாக ரஜினியின் இடதுபுறம் ர.ம.ம. தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர்தான் உட்கார்ந்திருப்பார். ஆனால் அன்றைய கூட்டத்திலோ மண்டப நிர்வாகி சிவா உட்கார்ந்திருந்தார். ரஜினியின் வலப்பக்கம் சற்று தள்ளி சுதாகர் உட்கார்ந்திருந்தார்.

 

 

rajini



எப்போதும் மாறாத புன்னைகையுடன் மா.செ.க்களிடம் நலம் விசாரித்த ரஜினி, எடுத்த எடுப்பிலேயே, "இந்தக் கூட்டத்தை கூட்டுவது பற்றி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

அது உடனே டி.வி. மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆகுது. உங்களுக்கு ரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியல. சரி அதவிடுங்க, ரெண்டு வருஷமா மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதில் ரொம்பவே மந்தமாகிட்டீங்க. அதே மாதிரி மக்கள் பிரச்சனைக்காக ஏதாவது போராட்டம் பண்ணீருக்கீங்களா, போராட்டம் பண்ணலாமான்னு தலைமையிடம் அனுமதியாவது கேட்டீங்களா. சித்திரை ஒண்ணாம் தேதி கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு, இதோ உட்காந்திருக்காரே மதுரை ரஃபீக் சொல்றாரு. அப்படி எதுவும் நான் சொன்னேனா'' என ரஃபீக்கைப் பார்த்து ரஜினி கேட்டதும் கப்சிப்பாகிவிட்டார் ரஃபீக். இது போன்று இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் மா.செ.க்களை நோக்கி பறக்கவிட்டார் ரஜினி.


கட்சிப் பெயர், கொடி பற்றி அனைத்து மா.செ.க்களும் ஆர்வமுடன் ரஜினியிடம் கேட்ட போது, "என்ன பேரு வைக்கலாம், கொடி எப்படி இருக்கலாம்னு நீங்களும் யோசனை சொல்லுங்க'' என ரஜினி கொக்கியைப் போட்டதும், "அண்ணாத்த' என அசந்துவிட்டனர் மா.செ.க்கள். "இஸ்லாம் மதகுருமார்கள் என்னைச் சந்தித்த பின்தான் சி.ஏ.ஏ. குறித்த பல விஷயங்கள் எனக்கு தெளிவாக புரிந்தது. நீங்களும் உங்க ஏரியா ஜமாத் தலைவர்களை சந்திங்க, தெளிவுபடுத்துங்க. விரைவில் மீண்டும் சந்திப்போம்'' எனக் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ரஜினி.

தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின் மட்டும், ரஜினியின் அனுமதியின் பேரில் மீடியாக்களைச் சந்தித்து தலைவர் எங்களிடம் பல விஷயங்களை விரிவாகப் பேசினார், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது'' என சுருக்கமாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

மக்கள் மன்றத்தினருடன் ரஜினி விரிவான ஆலோசனை, தேர்தலுக்கு ரெடியாகும் ரஜினி’ என மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே, "இஸ்லாம் மத தலைவர்களுடன் நடந்த சந்திப்பு இனிமையாக இருந்தது. கட்சி ஆரம்பிப்பது பற்றி விரைவில் சொல்வேன். எனக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. அதை பிறகு சொல்கிறேன்'' என போயஸ்கார்டன் வீட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.

என்ன ஏமாற்றம் என ரஜினி ஏரியாவில் சிலரை நாம் தொடர்பு கொண்ட போது,

"அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரொம்பவே யோசிக்கிறாரு. உறுப்பினர் சேர்ப்பு, பூத் கமிட்டி அமைப்பு போன்றவைதான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அப்படியே ஆரம்பிச்சாலும் இப்ப இருக்கும் 37 மா.செ.க்களில் 7 மா.செ.க்களுக்குத்தான் கட்சியில் மா.செ. பொறுப்பு கொடுப்பார். ஏ.சி.சண்முகத்தின் மகன் அருண்குமார், திருச்சி காங்கிரஸ் வி.ஐ.பி.அடைக்கலராஜின் மருமகன் பிரான்சிஸ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உறவினர் ஒருவர், சினிமா தயாரிப்பாளர் திருவண்ணாமலை தணிகைவேலின் உறவினர் எனப் பலரும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் மாநில-மாவட்ட பொறுப்புகளையும் தேர்தல் சீட்டையும் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றியும் ரஜினி தயக்கத்துடன் யோசிக்கிறார். 04—ஆம் தேதி நைட் சிங்கப்பூரிலிருந்து ராஜு மகாலிங்கம் வந்திருப்பதைப் பார்த்தா ஏதோ ஒரு முடிவுக்கு ரஜினி வந்துட்ட மாதிரி தெரியுது'' என்றனர்.

இந்த மாத இறுதியில் "அண்ணாத்த' ஷூட்டிங் முடிவடைகிறது. ஏப்ரலில் அப்படத்தின் ஆடியோ ரிலீஸ், அதற்கடுத்ததாக கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் படம் என சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ரஜினி, அரசியல் கமிட்மெண்டுகளையும் கமெண்டுகளையும் அவ்வப்போது ரிலீஸ் பண்ணுவார். வெற்றி 100% என்றால் அரசியலில் கலக்குவார் என்கிறார்கள்.

- து.ராஜா