Skip to main content

"நீங்கள் ஜெ.வைப் போல செயல்பட வேண்டும்" - எடப்பாடி பழனிச்சாமியை ட்ரிகர் பண்ணும் அதிகாரிகள்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுகவில் அமைச்சர்கள் யார் யாரென வெளியே தெரியாமல் இருந்தது. எந்த ஒரு முடிவையும் அவர்தான் எடுப்பார், எந்த ஒரு அறிவிப்பையும் அவர்தான் வெளியிடுவார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு பல அமைச்சர்கள் வெளியே பேசத் தொடங்கினர். அதில், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தங்கள் பேச்சாலேயே ஃபேமஸாகவும் இருக்கின்றனர். பேசுவது ஒரு புறம் என்றால் வசூல் நடவடிக்கைகள், ஆட்சி நடவடிக்கைகளிலும் கூட அமைச்சர்கள் அதிக சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர். மக்களாட்சியில் இதுதான் நியாயம் என்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் முழு சம்மதம் இல்லையாம்.

இதுகுறித்து, இரு போலீஸ் அதிகாரிகளை ஆலோசனை கலந்தார். எடப்பாடியுடன் ஆலோசனை செய்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தியும், "நீங்கள் ஜெ.வைப் போல செயல்பட வேண்டும். ஜெ. ஒவ்வொரு இடத்திலும் இரண்டுபேரை ஆதரிப்பார். ஒருவரை வீழ்த்துவார். மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவார். அதுபோல் நீங்கள் யாருக்கும் மிகவும் நெருக்கமானவர் என காட்டிக் கொள்ளாதீர்கள். ஒருவரை ஆதரிக்கும் அதே நேரம் அவர்களுக்கு எதிராகவும் ஒரு சில காரியங்களை செய்யுங்கள். உங்களுக்கும் ஜெ.வுக்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள்தான் அ.தி.மு.க.வின் சர்வாதிகாரி. எனவே உங்களை சுற்றியிருக்கும் வட்டத்தை உடைத்தெறியுங்கள்'' என்றனர்.


 

eps


அதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி தனக்கு நிழல்போல இருந்த சேலம் இளங்கோவனுக்கு செக் வைத்தார். சேலம் துணை கமிஷனர் சுப்புலட்சுமியை சென்னைக்கு மாற்றம் செய்தார். "சுப்புலட்சுமியை ஏன் மாற்றினீர்கள்' என எடப்பாடியிடம் கேட்ட இளங்கோவனை எடப்பாடி மதிக்கவேயில்லை.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரகுருவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தார். விழுப்புரம் என்றாலே சி.வி.சண்முகம் என்பதை மாற்றி குமரகுரு சொன்னால் அரசு வேலைகள் நடக்கும் என கொண்டு வந்தார். எடப்பாடியின் திடீர் ஆதரவால் சி.வி.சண்முகத்திற்கு இணையாக உயர்ந்த குமரகுருவின் வளர்ச்சியை எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜெ. உயிருடன் இருந்தபோது வேலுமணி, தங்கமணி ஆகியோர், "குமரகுரு கவுண்டர்களுக்கு எதிராக பேசினார்' என அவரது மா.செ. பதவியை எடப்பாடியுடன் சேர்ந்து பறிக்க வைத்தனர். அப்படிப்பட்ட எடப்பாடி குமரகுருக்கு எப்படி ஆதரவு தருகிறார் எனத் தெரியாமல் எடப்பாடியிடம் புலம்பினர். "அது அப்படித்தான் ஒன்றும் செய்ய முடியாது' என எடப்பாடி சொல்லிவிட்டார்.

இப்படி அ.தி.மு.க.வினர் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்யும் எடப்பாடி அடுத்தகட்டமாக பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே மோசமாகி வரும் உறவை சீர் செய்ய விரும்பினார். அதற்காக திருப்பதிக்கு வந்த வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது "சமீபத்தில் நடைபெற்ற குட்கா ரெய்டு போன்ற மத்திய அரசின் தாக்குதல்களை குறைக்க வேண்டும். கூட்டணிக்கு நாங்கள் தயார். ரஜினி வந்தால் என்ன செய்வது' என்பது பற்றி யெல்லாம் எடப்பாடி பேசினார். எடப்பாடி வெங்கையா நாயுடு சந்திப்பை தொடர்ந்து வேலுமணியும் தங்கமணியும் டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர்.

பத்திரிகை விருது வழங்கும் விழாவுக்குச் சென்ற வேலுமணி அங்கேயே தங்க வைக்கப்பட்டார். பா.ஜ.க.வின் முக்கியமான தலைவரான ஜெட்லியுடன் தனது அமைச்சர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த கூட்டணி பேச்சுகள் இனியும் தொடரும் என்கிறது டெல்லி வட்டாரம். இப்படி சகலவிதத்திலும் தன் கை ஓங்கியிருக்க வழி வகை செய்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 

 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.