Skip to main content

ஒரு தாயின் கண்ணீர்ப் போர்!

Published on 07/02/2019 | Edited on 04/03/2019

"இந்த ஆண்டு பொங்கலுக்கு என் மகன் வருவான் என்று காத்திருந்தேன். அது கானல் நீராகிவிட்டது. எனக்கு 71 வயது ஆகிவிட்டது. நான் கண்ணை மூடுவதற்குள் என் மகனை பார்ப்பேனா?'' என்று வாய்விட்டு அழுகிறார் அற்புதம்மாள்.

மதுரைக்கு வந்த அவரை நக்கீரனுக்காக சந்தித்தபோது நம்மிடம் அவர் கூறியது… “""பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலத்தை திரித்து எழுதிவிட்டேன் என்றும், மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய பெல்ட்பாம் தயாரித்தது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், பேரறிவாளன் விஷயத்தில் சட்டமறியா பிழை நடந்துவிட்டது என்றும் ராஜீவ் கொலையை விசாரித்த அதிகாரிகளே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்.

arputhammal



ஆனாலும் என் மகனை இதுவரை விடுதலை செய்யாமல் என் மகனைக் கேட்டு மடிப்பிச்சை ஏந்த வைக்கிறார்கள். ஒரு தாயின் ஏக்கம் ஆளும் அரசை சும்மாவிடாது. நாங்கள் பெரியார் இயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 19 வயதில் எனது மகன் சிறைக்குச் சென்றான். இப்போது 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும்கூட எனது மகனை விடுதலை செய்வதில் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநரின் ஒரு கையெழுத்துக்காக காத்திருக்கிறது.

148 நாட்கள் ஆகியும் ஏன் ஆளுநர் தாமதிக்கிறார்? நியாயமான கோரிக்கை புறந்தள்ளப்படுகிறது. தமிழக அரசு, "எங்கள் வேலை முடிந்துவிட்டது, இனி மத்திய அரசின் ஆளுநர் கையில் இருக்கிறது' என்கிறது. சு.சாமியோ, "பா.ஜ.க. இருக்கும்வரை பேரறிவாளனுக்கு விடுதலை கிடையாது' என்று ஆணவமாக சொல்கிறார். அவரைதான் விசாரணை செய்ய வேண்டும். என்ன காரணமோ பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தப்பித்துவிட்டனர். 28 வருடம் என் மகனை பலிகடா ஆக்கிவிட்டனர்.



சிறையில் அவனுடைய உடல் ஆரோக்கியமற்று இருக்கிறது. சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறையிலேயே அவனை கொன்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதாவது நடந்தால் நானும் சாவதைத் தவிர வேறுவழி இல்லை. தமிழகம் மக்களிடம் சென்று ஒரு தாயாக என் கண்ணீருக்கு பதில் கேட்கப்போகிறேன். ஆளுபவர்களின் பொய் முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டப் போகிறேன். இனியேனும் குட்டியை தாயோடு சேர்த்து வையுங்கள் என்று மக்களிடம் மடிப்பிச்சை கேட்கப்போகிறேன்'' என்று அற்புதம்மாள் கதறியது நெஞ்சை உலுக்கியது.இந்தத் தாயின் கண்ணீரை துடைப்பாரா ஆளுநர்? தேர்தல் நெருங்கும்போது நல்ல சேதி வரும் என்பதுதான் கடைசிக்கட்ட நம்பிக்கை.




 

Next Story

''அதையெல்லாம் கடந்து என் பையன் வந்தாச்சு''-அற்புதம்மாள் ஆனந்த கண்ணீர்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

 '' My boy has come after all that '' - Arputhammal happy tears!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வேலூர் ஜோலார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ''மனிதநேயம் உள்ள ஊடகங்களுக்கெல்லாம் நன்றி. இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ''நீண்ட நாளாக உங்களை புறக்கணித்ததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்ன பேசுவது என்ற தடுமாற்றம் தான் என்னை தடுத்தது.இன்று முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்  வந்துள்ளேன். 31 ஆண்டுகாலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறையில் கழிந்தது என உட்கார்ந்து யோசித்தால் அந்த வலி, வேதனை எவ்வளவு என்பது புரியும். அதை கடந்து வந்தாச்சு என் பையன். இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்ததால் அவனின் உடல்நிலையை என்னால் கவனிக்க முடிந்தது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். எனது மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி'' என்றார் ஆனந்த கண்ணீருடன்.  

 

 

Next Story

‘விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்...’- 7 பேர் விடுதலைக்கான மனிதசங்கிலி போராட்டம்

Published on 10/03/2019 | Edited on 10/03/2019
manithachangili


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இதில் புதுச்சேரி மற்றும் கடலூர்,  விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த த.வா.க,  த.பெ.தி.க, சிபிஐ, அ.ம.மு.க, வி.சி.க, தி.வி.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும்  பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


அப்போது தமிழக அமைச்சரவை தீர்மானப்படி தமிழக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் 7 பேரின் விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இல்லையெனில் இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.