Skip to main content

கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரிக்க அதிகாரிகள் சம்மதம்! 

Published on 13/05/2020 | Edited on 13/05/2020


  

koyambedu market



சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு கரோனா பரவியதில் பெரும்பங்கு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இருக்கிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கிற வகையில், தற்போது கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை மாதவரம் மற்றும் திருமிழிசைக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள் இபிஎஸ்சும், ஓபிஎஸ்ஸும்.


கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூன்றாக பிரித்து சென்னை மற்றும் சென்னையை சுற்றி 3 இடங்களில் உருவாக்க வேண்டும்  என சில்லறை வியாபாரிகள் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்திருந்ததை நக்கீரன் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தோம். 

கோயம்பேடு, வடசென்னை, வண்டலூர் என 3 இடங்களில் மொத்த வியாபார சந்தைகளை உருவாக்குவதன் மூலம், நோய் தொற்று போன்ற பெரும்நோய் தாக்கத்தின்போது தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக கையாள முடியும் என்பதுடன், கோயம்பேட்டை மையப்படுத்தி உருவாகும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்க முடியும் என்றும் அந்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததையும் நமது செய்தியில் பதிவாகியிருந்தது.

 

 


இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். உட்பட உயரதிகாரிகளுடன்  இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் விவாதித்தனர். அப்போது, கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அந்த ஆலோசனையில், மூன்றாக பிரிப்பது காலத்தின் கட்டாயம். பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் சொன்னதை இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோயம்பேடு சந்தை விரைவில் மூன்றாக மாறும் என்கின்றன சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள். 

இதற்கிடையே, திருமழிசையில் மாற்றப்பட்டிருக்கும் தற்காலிக சந்தையும், கோயம்பேடு மாதிரியான கூட்ட நெரிசலில் சிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர, கோயம்பேட்டில் இருந்த சில்லரை வியாபாரிகளுக்கு திருமழிசையில் கடைகள் ஒதுக்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்களிடமும் அதிருப்திகள் வெளிப்படுகின்றன.

 

 

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.