Skip to main content

குஷ்பு சினிமா ஸ்டாராக இருக்கலாம்; ஆனால் மருத்துவர் எழிலன் அரசியல் ஸ்டார் - திருமா பேச்சு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

ghf



தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, "ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அதிகப்படியான விருப்பத்தின் பேரிலேயே இன்று இங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன்.

 

அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் தளபதி அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும். எழிலனுடைய தந்தை பேராசிரியர் நாகநாதன் பொருளியல் வல்லுநர். பொருளாதாரத்தில் ஆகச்சிறந்த வல்லுநர். மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான தோழர். காலையில் கலைஞர் அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார் என்றால் அவரோடு சேர்ந்து நடக்கின்ற பாக்கியம் பெற்றவர் பேராசிரியர் நாகநாதன். அந்த அளவுக்கு நெருக்கமானவர். அவருடைய அருமை புதல்வர்தான் நம்முடைய மருத்துவர் எழிலன். நம்முடைய தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவருடைய பிள்ளையாகவே இருந்து அவரை பார்த்துக்கொண்டவர் மருத்துவர் எழிலன். 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 


கோபாலபுரமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் அவருடன் 24 மணி நேரமும் இருந்து அவரை கண்காணித்தார் என்ற பெருமை அவர் ஒருவரையே சாரும். அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருப்பவர் அல்ல. தனக்குப் பதவி வேண்டும் என்ற அடிப்படையில் தளபதியை அவர் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. இவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் கொள்கைகளை சட்டமன்றத்தில் பாதுகாக்கும் முக்கியப் பணியை சிறப்பாகச் செய்வார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அதையும் தாண்டி அனைத்து காரியங்களையும் கொள்கை சார்ந்து சிந்திக்கக் கூடியவர். வெறும் கட்சிப் பற்று, தலைமைப் பற்று என்று இல்லாமல் தமிழக மக்களுக்காக ஒரே கோட்டில் அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளையும் எப்போதும் காக்க வேண்டும், அதன்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர் என்பதால் சமூகநீதி கருத்தைக் காப்பதில் யாரையும் விட அவருக்கு அதிக அக்கறை உண்டு. 


நாடு தழுவிய அளவுக்கு அவருக்குக் கருத்தியல் சார்ந்த தொடர்புகள் உண்டு. அப்படி இவர் ஆற்றிய பணிகளைக் கண்டு மனமுகந்து இவரை உங்களிடம் ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் சினிமா ஸ்டாராக இருக்கலாம், ஆனால் இவர் அரசியல் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. கருத்தியலில் இவரோடு அவர் போட்டியிட முடியாது. இவரின் விவாதத்துக்கு அவரால் பதிலளிக்க முடியாது. அவரையும் இவரையும் நாம் ஒப்பிடவே முடியாது. அவருக்கு சினிமா புகழ் உண்டு. அதை வைத்து அரசியலிலும் புகழ் தேட ஆசை. எனவே அவர் ஒரு கட்சியில் சேர்ந்த இங்கே போட்டியிட வந்திருக்கிறார். இவர் தமிழகத்தைச் சமூகநீதி பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். எனவே இந்த தமிழகம் அடிமையாகாமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீயசக்திகளைப் புறந்தள்ள வேண்டும். மருத்துவர் எழிலனை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.


 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.