Skip to main content

பாபநாசம் பட பாணியில் கொலை! வாட்ஸ் அப் வாக்குமூலத்தில் சிக்கிய கொலையாளி!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

 

லையாளத்தில் வெளியான ’த்ரிஸியம்’ படம், கமல்ஹாசன் நடிக்க தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.   இப்பட பாணியில் கேரளாவில் ஒரு கொலை சம்பவம் நடந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’’த்ரிஸியம் படத்தை பார்த்துதான் கொலை செய்தேன்’’என்று கொலையாளியும் வாக்குமூலம் அளித்துள்ளார்.  

 

k


கேரளா கோட்டையம் பகுதியைச்சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது40).  இவரது மனைவி வித்யா.  கடந்த 22ம் தேதி தனது மனைவியை காணவில்லை என்று பிரேம்குமார் உதயம்பூர் போலீசில் புகார் அளித்தார்.  இதையடுத்து போலீசார் விசாரணையை துவங்கினர்.  வித்யாவின் செல்போன் குறித்து ஆய்வு செய்தபோது, அந்த செல்போனின் சிக்னல் பீகாரில் இருப்பது போன்று காட்டியது.  அது குறித்து போலீசார் தொடர் ஆய்வில் இருந்தபோது, திருநெல்வேலியில் ஒரு பெண் கொலை  செய்யப்பட்டு சாலையோர காட்டில் வீசப்பட்ட தகவல் கிடைத்தது.  விசாரணையில், அது வித்யா என்று தெரியவந்தது.

 

வித்யாவின் கொலைக்கு பின்னர், பிரேம்குமார் ஒரு பெண்ணுடன் திருநெல்வேலியில் வாழ்ந்துவருவது தெரியவந்தது.  இதனால், வித்யா கொலையில், போலீசாருக்கு பிரேம்குமாரின் மீது சந்தேகம் எழுந்தது.  பிரேம்குமாரின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, வித்யா காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்ட அதே தினத்தில் வித்யாவுடன் பிரேம்குமார் ஒரு பங்களாவில் இருந்தது உறுதியானது.  அப்படியானால் பிரேம்குமார்தான் தனது மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்.  இருப்பினும் அதற்கான வலுவான ஆதாரங்களை தேடி வந்தனர். 

 

இதற்கிடையில், சுனிதா என்ற பெண்ணுடன் பிரேம்குமார் வாட்ஸ் -அப்பில் பேசியதை போலீசார் புலனாய்வு செய்து, அந்த பேச்சினை ரெக்கார்டு செய்துவிட்டனர்.  அதில், ‘’நான் தான் கொலையாளி என்று போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டார்கள்.   வித்யாவை கொலை செய்ததை போலீசிடம் சொல்லிவிடப்போகிறேன்’’என்று பிரேம்குமார் பேசியதை வாக்குமூலமாக எடுத்துக்கொண்டு, போலீசார் அவரைகைது செய்தனர்.

 

விசாரணையில், ‘’சுனிதாவை நான் காதலித்து வருகிறேன்.  அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.  அவருக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை.  எனக்கு என் மனைவி மீது விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பில் நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசினோம்.  இதன் பின்னர் தொடர்ந்து பழகி வந்தோம்.  எங்களின் பழக்கம் என் மனைவிக்கு பிடிக்கவில்லை.  இதனால் எங்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  

 

தொடர்ந்து நாங்கள் சந்தோசமாக வாழ, வித்யா தடையாக இருக்கிறாள் என்று, அவளை த்ரிஸியம் பட பாணியில் கொலை செய்துவிட முடிவு செய்தோம்.  அதன்படி, நானும், சுனிதாவும் சேர்ந்து வித்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்தோம்.  உடலை காரில் ஏற்றுக்கொண்டு, திருநெல்வேலி சென்றோம்.  அங்கே சாலையோர புதர்காட்டில் உடலை வீசிவிட்டு வந்துவிட்டோம்.  போலீசாரை திசைதிருப்புவதற்காக, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டோம்.  திருநெல்வேலியிலேயே சுனிதாவுடன் இரண்டு மாதங்களாக குடும்பம் நடத்தினேன். ’’ என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.   சுனிதாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவனின் செயலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.