Skip to main content

எம் .பி க்கு அடி ! தி .மு .க அலுவலகம் சூறை !

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

டந்த 10 வருடமாக திருச்சியில் எம்.பி.யாக வலம் வருபவர் அ.தி.மு.க. குமார். அவரது சொந்த ஏரியாவிலேயே அவர் கையை ஓங்குவதும், அங்கிருந்த அவர் சமூகத்தை சார்ந்த தி.மு.க.வினர் அவரை முதுகில் குத்துவதும், அவருக்கு உதவியாக வந்த நவல்பட்டு விஜியை சக்கையாக கவனிப்பதும், எம்.பி. குமாரை போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பாக இழுத்துச் செல்வதும் வீடியோ வடிவில் வைரலாக பரவி தேர்தல் நேரத்தில் அரசியல் சூட்டைக் கிளப்பிவிட்டது.

trichytension

திருச்சி பொன்மலைபட்டியில் குடியிருக்கிறார் மா.செ.வும் எம்.பியுமான குமார். அங்கு பேருந்துநிறுத்தமொன்றை தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் அன்பில் மகேஷின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்ட ஆலோசிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குமார் அப்பகுதியில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் ஒதுக்கி முறைப்படி ரயில்வேயில் அனுமதி பெற்று வேலைசெய்ய அதற்கான டெண்டரும் விட்டுவிட்டார். தி.மு.க. பகுதிச் செயலாளர் தர்மராஜ் அலுவலகத்திற்கு எதிரே பேருந்து நிறுத்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில்தான் பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரங்களை அனுப்பி வைத்தார் ஒப்பந்தக்காரர். இதனைப் பார்த்த தி.மு.க பகுதிச் செயலாளர் தர்மராஜ், ரயில்வே துறைக்கு தகவல் கொடுத்து அனுமதியில்லாமல் பேருந்து நிலையம் அமைப்பதாக முறையிடவே... விரைந்து வந்த மத்திய ரயில்வே படையினர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அ.தி.மு.க. மாணிக்கம் என்பவர் "தர்மராஜ் வேலையை நிறுத்திவிட்டார். உங்களையும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் தவறாகப் பேசுகிறார்' என்று எம்.பி. குமாரிடம் போட்டுக் கொடுக்க, ஆவேசமாக வந்த எம்.பி.யே பகுதிச் செயலாளரின் அண்ணன் பெரியசாமி என்பவரை தாக்க முயற்சித்திருக்கிறார்.

பொக்லைன் இயந்திரம் மூலம் வேலை நடத்தவும் உத்தரவிட்டு, பெரியசாமியை எம்பி. அடிக்கப் பாய்ந்தார் என்கிற தகவல் பரவியதும்தான் தி.மு.க. குரூப் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திருச்சி மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஏர்போர்ட் விஜி மற்றும் அ.தி.மு.க. எம்.பி குமார் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எம்.பி.யின் கன்னத்தில் அடி விழுந்தது. அ.தி.மு.க நிர்வாகிகளும் உருட்டுக்கட்டைகளுடன் குவிந்தனர். தி.மு.க. பகுதிச் செயலாளர் தர்மராஜன் அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.

இரு தரப்பினர் மீதும் புகார் தரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிக்குள் ஏற்கனவே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், எம்.பி. குமாருக்கும் முட்டல் மோதல் இருக்கும் நிலையில், இது புதுப் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

திருச்சியில் கடந்த 15 வருடங்களாக தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிக்குள் அடிதடி பிரச்சனை வந்தது இல்லை. இந்தச் சம்பவத்தால் பதட்டம் அதிகரித்துள்ளது.
 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.