டெங்குக் கொசுக்களை ஒழிக்கும் மீன்வகை
மழை விளைவுகளைத் தடுக்க

கடந்த வார மழை அனைவரையும் வாட்டி எடுக்கிறது என்றால், அதில் குளிர் காய்கின்றன கொசுக்கள். மழையினால் உருவாகியுள்ள திடீர் நல்ல நீர் குட்டைகள், காணாமல் போய் மழையினால் திரும்பக் கிடைத்துள்ள குளங்கள் ஆகியவற்றில் டெங்குக்கொசுக்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக, கொசுக்களில் ஏடிஸ் வகையின கொசுக்கள் (டெங்கு கொசு) நன்னீர் உயிரி. ஆதலால் அவை மழைநீர் தேங்கும் இடங்களில் முட்டையிட வாய்ப்புள்ளது.

மழைநீர் தேங்குமிடங்களில் 'கம்பூசியா' எனப்படும் ஒருவகை மீன்களை விட்டால் கொசு உருவாகுவதைக் குறைக்கலாம் என்று கடல்வாழ் உயிர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் ஒரு நன்னீர் உயிரி. அதுமட்டுமின்றி இது உணவாக கொசு லாவாக்களை உண்ணக்கூடியது. ஆதலால் இது டெங்கு ஒழிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். முன்பிருந்தே இந்த வழக்கம் தெரிந்தவர்களால் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் நகராட்சி மற்றும் மாநகராட்சி வழங்கும் நீரில் வாழாது. ஏனெனில் அவை 'குளோரினேஷன்' செய்யப்பட்டவை. மேல்நிலைத்தொட்டிகளிலும் இது வாழாது. கீழ்நிலை தொட்டிகள், கிணறுகள், திறந்தநிலை மீன்வளர்ப்பு தொட்டி மற்றும் குளங்களில் வளரும். பள்ளிச் சிறுவர்கள் 'கட்பீஸ்' மீன்கள் என்று இவற்றை அழைப்பார்கள். வளர்ப்பு மீன் கடைகளில் இதே பெயரில் விற்கும் இந்த மீன்களை வாங்கி, மழையினால் நமது வீடுகளருகே உருவாகியுள்ள திடீர் குளங்களில் விட்டால், டெங்குக் கொசு உருவாகுவதைத் தடுக்குமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கமல்குமார்