Skip to main content

அண்ணாமலை கூறுவதை கேட்டு ரசிக்க வேண்டுமே தவிர சீரியஸாக ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது.." - திருச்சி வேலுச்சாமி

Published on 09/02/2022 | Edited on 12/02/2022

 

f


நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாவை கிட்டத்தட்ட 140 நாட்கள் கழித்து தமிழக ஆளுநர் கடந்த 2ம் தேதி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஆளுநர் மசோதா, ஏழைப்புற மாணவர்களின் நலன்களை புறக்கணிப்பதாக் கூறி மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுசாமியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்ட போதே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி அவரின் நியமனத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். தமிழக அரசுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அதில் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார். இன்றைக்கு தமிழக அரசு அனுப்பிய நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். இதை எல்லாம் முன்கூட்டியே கணித்துத்தான் அழகிரி இவ்வாறு கூறியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறதே?

 

ஆளுநர் நியமிக்கப்பட்ட உடனே இதுதொடர்பாக நீங்கள் தான் முதல் விவாதத்தை முன் எடுத்தீர்கள். அதில் நான் தெளிவாக பல சம்பவங்களை எடுத்துக்கூறி, மத்திய அரசின் ஒப்புதலோடு ஆளுநர் முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க முயல்வார் என்று தெரிவித்திருந்தேன். ஆளுநரின் ட்ராக் ரெக்கார்டு அப்படி இருக்கிறது. அவர் இதற்கு முன்பு ஆளுநராக இருந்த மாநிலத்தில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி, மாணவர் அமைப்புக்கள் என எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் எங்களுக்கு நீங்கள் ஆளுநராக எங்களுக்கு தேவையில்லை என்று கூறி, அவரை வெளியேற்றியுள்ளார்கள். அந்த மக்களை போல் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் மனிதர்கள் தானே, தவறு செய்தால் நமக்கும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது தானே? இவர் இப்படி நடப்பார் என்று கணித்ததால் தான் அன்றே நாங்கள் இவரை கண்டித்தோம். ஆனால் அன்றைக்கு சிலர் பதவியேற்கும் முன்பே இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்கள். இன்றைக்கு நீங்கள் அன்று கூறியது சரிதான் என்று எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். 

 

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஆளுநரின் அதிகாரத்தை மீறிய செயல் என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு இந்த மசோதா எதிராக இருப்பதாக ஆளுநர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இதை இரண்டு விதமாக நாம் பார்க்க வேண்டும். இரண்டு செய்திகள் இதில் அடங்கி இருக்கிறது. கவர்னரின் வேலை என்பது அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்லும் வேலை அல்ல. சட்டப்பிரச்சனை ஏதேனும் இருந்தால் அதுதொடர்பாக அவர் அரசாங்கத்திடம் கருத்து கேட்கலாம், ஆனால் அரசையே ஆள வேண்டும் என்று நினைக்க கூடாது. குறிப்பாக ஆளுநரின் உரையில் அவர் என்ன செய்வார், அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே வரி விடாமல் படிப்பார். ஒரு சொல் கூட அவர் சொந்த கருத்தை பேசி விட முடியாது. அப்படி இருக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவர் ஆலோசனை சொன்னால், அரசை மட்டுமல்ல, வாக்களித்த மக்களையும் சேர்த்தே இவர் அவமானப்படுத்துவதை போல் இருக்கிறது. 

 

அதையும் தாண்டி கல்வி சம்பந்தமான விஷயத்தில் ஆளுநர் தடையிட முடியாது. ஏனெனில் கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. அதைப்பற்றி அவருக்கு கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. மாநில பட்டியலில் இருந்தால் கூட விளக்கம் கேட்கலாம். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு கூட அவருக்கு இல்லாத நிலையில், அரசுக்கு ஆலோசனை செய்வது என்பது தவறான ஒரு முன் உதாரணமாகவே இருக்கும். ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தின் எல்லையை அறிந்துகொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். அதில் அவர் தவறிவிட்டார் என்பதே அனைவரும் அறிந்த உண்மையாக தற்போது இருக்கிறது. 

 

நீங்கள் ஆளுநர் கூறியது தவறு என்று கூறியிருக்கிறீர்கள், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அவர் நன்றி சொல்வார், அவருக்கு எதை வேண்டுமானாலும் பேசுவார். என்னுடைய பேரன் இருக்கிறார், அவன் என்னிடம் தாத்தா உங்களை எட்டி உதைத்தால் எங்கே போய் விழுவீர்கள் தெரியுமா? என்று என்னிடம் கேட்டால் நான் அவரின் கோவமா படுவேன்.  அதே போல் அந்த சின்ன பையன் அண்ணாமலை கூறியதை ரசிக்க வேண்டும், சிரிக்க வேண்டுமே தவிர சீரியஸா நினைத்து கேள்வி கேட்க கூடாது. வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பாஜக, தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது. அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது. அவர் செய்வதை அவர்கள் கட்சியில் அனுபவம் உள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.