![complaint against Nityathadi balaji wife nithya in police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/OKr1iuWkYf6C0oMoW_nuy4lStkUn-nsnODwHgia9FRk/1683781441/sites/default/files/inline-images/37_50.jpg)
தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நித்யா தனது குழந்தையுடன் சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார்.
அண்மையில் நித்யாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது காரை நித்யா சேதப்படுத்தியுள்ளதாகக் கூறி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளிவந்தார். வெளிவந்தவுடன் பாஜவில் இணைந்தார்.
இந்த நிலையில் நித்யா மீது கடன் தொடர்பான விஷயத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் புதிதாக தொழில் தொடங்க எண்ணியுள்ளார். அதற்காக நித்யாவிடம் ரூ. 94 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதில் ரூ. 52 ஆயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ. 42 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வனுக்கும் நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் நித்யா. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பின்பு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாதவரம் போலீஸார் நேரில் சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். பிறகு இந்த சம்பவம் தொடர்பாக நித்யாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். கலைச்செல்வனும் புகார் அளித்துள்ளார். அவர்கள் இருவரது புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.